எவ்வளவு மோசம் தெரியுமா.. ஓசூர் தர்பூசணி வியாபாரிகள் பண்ண வேலையை பாருங்க!
ஓசூர்: ஒசூர் அருகே தர்பூசணி பழங்களில் சிவப்பு நிறமூட்டிகள் ஊசி மூலம் செலுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பழங்களை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், குறிப்பாக குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த பழங்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும், நல்ல சிவப்பு நிறத்திலும் இருக்க வேண்டும் என்பதற்காக வியாபாரிகள் ரசாயன நிறமூட்டிகளை பயன்படுத்துவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஒசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் மற்றும் தளி உணவு பாதுகாப்பு அலுவலர் சந்தோஷ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் குழு தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தேன்கனிக்கோட்டை காவல் நிலையம் அருகே இருந்த மூன்று கடைகளில் டன் கணக்கில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இந்த ஆய்வின்போது, இரண்டு கடைகளில் தர்பூசணி பழங்களுக்கு ஊசி மூலம் ரசாயன நிறமூட்டிகள் செலுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், வியாபாரிகள் எரித்ரோசின் மற்றும் PONCEAU 4R பவுடர் போன்ற ரசாயனங்களை ஊசி மூலம் செலுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ரசாயனங்கள் தலைவலி, காய்ச்சல் போன்ற minor பாதிப்புகளை மட்டுமல்லாமல், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களையும் ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக இது குழந்தைகளை மிக அதிகமாக பாதிக்கும் அபாயம் உள்ளது என்று எச்சரித்தனர்.

மேலும், பொதுமக்கள் நிறமூட்டப்பட்ட தர்பூசணி பழங்களை கண்டறிவது எப்படி என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தர்பூசணியை சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டால், நிறம் தனியாக பிரிந்து வந்துவிடும். அதேபோல, பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பரை வைத்து தர்பூசணியை துடைத்தால், சிவப்பு நிறம் அதில் ஒட்டிக்கொள்ளும். இப்படி இருந்தால் அந்த பழம் ஆபத்தானது என்று அவர்கள் கூறினர்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து, நிறமூட்டி கலக்கப்பட்ட தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர். மேலும், இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் இதுபோன்ற தர்பூசணி பழங்களை வாங்கி ஏமாற வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications