தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து! பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 36 பேர் தீ காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தெலங்கானா மாநிலம், பசாமயிலாரத்தில் உள்ள சிகாச்சி கெமிக்கல் தொழிற்சாலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்து பெரிய அளவில் தீயை உருவாக்கியுள்ளதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியிருக்கிறது.

வெடி விபத்து நடந்த தொழிற்சாலைக்குள் 61 பேர் சிக்கியிருந்துள்ளனர். 11 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து மாநில பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக களத்தில் இறங்கி காயமடைந்தவர்களை மீட்டு பத்திரமாக மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெடி விபத்து தெலங்கானா மாநிலத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். ஆளும் காங்கிரஸ் கட்சி, இந்த விபத்து குறித்து "கடும் அதிர்ச்சி" அடைவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. தெலங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் மகேஷ் குமார் கவுட், "இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். கவலைக்கிடமான நிலையில் இருக்கும் காயமடைந்த தொழிலாளர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று கூறினார்.

பாஜக மாநில தலைவர் ஜி. கிஷன் ரெட்டி, "தீ விபத்து குறித்து கேள்விப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
தெலங்கானாவின் எதிர்க்கட்சித் தலைவரும், பிஆர்எஸ் செயல் தலைவருமான கே.டி. ராம ராவ், "படாஞ்சேருவின் பசாமயிலாரம் தொழிற்பேட்டையில் நடந்த இந்த வெடி விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. உடனடியாக விபத்து இடத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுங்கள். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அனைத்து தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை கட்டாயம் நடத்தப்பட வேண்டும். இந்த சம்பவம் குறித்து அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தொழிற்சாலைகளில் அவ்வப்போது பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்வது இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க உதவும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications