நெஞ்சே பதறுதே.. 4-வயது சிறுவனை சுற்றி வளைத்து கடித்துக் குதறிய தெருநாய்கள்.. பரவும் சிசிடிவி காட்சி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் வீட்டு வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவனை ஐந்து ஆறு தெருநாய்கள் சேர்ந்து கடித்து கொன்றுவிட்டது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களின் இதயத்தை ரனமாக்கி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 5-வயது சிறுவன் படுகாயம் அடைந்து சிறிது நேரத்தில் துடிதுடிக்க உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்
தெலுங்கானா மாநிலம் நிசம்பாத் பகுதியை சேர்ந்தவர் கங்காதர். ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக கங்காதர் பணியாற்றி வருகிறார். கங்காதர் தனது குடும்பத்தினருடன் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலேயே வசித்து வருகிறார். விடுமுறை நாட்களில் கங்காதரின் 4- வயது மகனும் தந்தை வேலை பார்க்கும் இடத்திற்கு வந்து அப்பகுதியில் விளையாடுவது வாடிக்கை என்று சொல்லப்படுகிறது. இப்படித்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் ஐதராபாத்தின் அம்பர்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கங்காதர் பணியாற்றி வரும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அவரது 4 -வயது மகனும் விளையாடிக்கொண்டு இருந்துள்ளான்.

சுற்றி வளைத்து கடித்த நாய்கள்
தனது வயதுக்கேற்ற குறும்புத்தனத்துடன் சிறுவன் அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடிக்கொண்டு இருந்த சமயத்தில் தீடீரென அங்கு சுற்றி திரிந்த தெருநாய்கள் சிறுவனை சுற்றி வளைத்தன. இதனால் பயந்து போன சிறுவன் சத்தம் போட்டுள்ளான். நொடிப்பொழுதில் சிறுவன் மீது பாய்ந்த தெருநாய்கள் கடித்து குதறியுள்ளன. சிறுவன் தெருநாய்களின் கடியில் இருந்து தப்பி ஓட முயன்றாலும் அவனை விடாமல் ஆடைகளை பிடித்து இழுத்தும் நாய்கள் கடிக்கின்றன. இதில் சிறுவன் கீழே விழுகிறான்.

தெருநாய்கள் கடித்ததில் பலி
சிறுவன் எழுந்து தப்பிக்க முயன்றாலும் சுற்றி வளைத்து நிற்கும் நாய்கள் கடித்து குதறுகின்றன. சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த தந்தை கங்காதர் தெருநாய்களிடம் இருந்து தனது மகனை மீட்டுள்ளார். மருத்துவமனைக்கு தனது மகனை கொண்டு சென்றுள்ளார். ஆனால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தெருநாய்கள் கடித்ததில் 5-வயது சிறுவன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தார்
இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் காவலாளியாக பணியாற்றும் ஒருவர் கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமை நான் பணியில் இருந்த போது அடுக்குமாடி குடியிருப்பு வாட்ச்மேன் ஒருவர் உதவி கேட்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தார். நான் ஓடிச்சென்று பார்த்த போது சிறுவன் ஒருவனை நாய்கள் சுற்றி வளைத்து கடித்தன. இதுபோன்ற ஒரு சம்பவம் இங்கு நடப்பது இதுதான் முதல் தடவை" என்றார். சிறுவனை நாய் கடித்துக் குதறும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சிகளை வெளியாகி நெஞ்சை பதற வைக்கும் வகையில் அமைந்துள்ளது. சிறுவனை நாய் கடித்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தெலுங்கானா அமைச்சர் வேதனை
சிறுவனை தெருநாய்கள் கடித்துக்கொன்ற சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள தெலுங்கானா அமைச்சர் கேடி ராம ராவ், "தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சியின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விலங்கு பராமரிப்பு மையங்களை உருவாக்கியுள்ளோம். சிறுவனை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications