தொடரும் பயங்கரம்.. ஹைதராபாத்தில் 4 வயது சிறுவனை சுற்றி வளைத்த நாய்கள்.. கடித்து குதறியதில் படுகாயம்
ஒருகட்டத்தில், சிறுவன் மீது பாய்ந்த தெரு நாய்கள் அவனை கடித்துள்ளன. அதிர்ஷ்டவசமாக சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்ட அவனது தாய் வெளியே ஓடி வந்து பார்த்துள்ளார்.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் தெரு நாய்கள் கடித்து நேற்று ஒரு சிறுவன் பலியான நிலையில், தற்போது மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஹைதராபாத் முழுவதும் தெரு நாய்களை பிடித்து செல்லும் பணியில் மாநகராட்சி நிர்வாக்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பயங்கர சம்பவம்
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கடந்த சில மாதங்களாகவே தெரு நாய்கள் அச்சுறுத்தல் அதிக அளவில் உள்ளது. இதுதொடர்பாக மக்கள் புகார் அளித்தும் ஹைதராபாத் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த சூழலில், அங்குள்ள ஆம்பர்பெட் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்ற 5 வயது சிறுவன் தனது வீட்டின் மூன்பு நேற்று விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த 3 தெரு நாய்கள், சிறுவன் மீது திடீரென பாய்ந்து அவனை கடித்து குதறின.

உயிரிழந்த பரிதாபம்
சிறுவனின் பெற்றோர் வீட்டுக்குள் இருந்ததால் அவனது அலறல் சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை. இதையடுத்து, சுமார் 5 நிமிடங்களுக்கும் மேலாக நாய்கள் கடித்ததில் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் சோகத்தையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. மேலும், சிறுவனை நாய்கள் கடிக்கும் சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகியதால், இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியது. ஹைதராபாத்தில் தெரு நாய்களை பிடித்து செல்லப்படும் என தெலங்கானா அரசும் உறுதியளித்தது.

மீண்டும் ஒரு சிறுவனை..
இந்நிலையில், இந்த சோக சம்பவம் தந்த அதிர்வுகள் அடங்குவதற்குள்ளாக மற்றொரு பயங்கர சம்பவம் நடந்திருக்கிறது. ஹைதராபாத்தை சேர்ந்த ரிஷி (4) என்ற சிறுவன் இன்று காலை தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த 4 தெரு நாய்கள் அவனை துரத்தியுள்ளன. இதில் பயந்துபோன சிறுவன் அங்கிருந்து ஓடியுள்ளான். ஆனால், நாய்கள் விடாமல் துரத்திச் சென்றன.

படுகாயம்
ஒருகட்டத்தில், சிறுவன் மீது பாய்ந்த தெரு நாய்கள் அவனை கடித்துள்ளன. அதிர்ஷ்டவசமாக சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்ட அவனது தாய் வெளியே ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது தனது மகனை நாய்கள் கடிப்பதை பார்த்த அவர், அவற்றை விரட்டியுள்ளார். பின்னர், கை, கழுத்து, இடுப்பு ஆகிய இடங்களில் இருந்து ரத்தம் வழிந்துகொண்ட சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை, சிறுவனின் அலறல் சத்தம் கேட்காமல் இருந்திருந்தால் மீண்டும் ஒரு விபரீதம் நடந்திருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications