2 லட்சம் கேஷ்.. ஒரு லட்சம் செக்கா தரணும்.. இல்லாட்டி கொன்னுடுவேன்.. அதிர வைத்த 14 வயது சிறுவன்!
7 வயது சிறுவனை கடத்திய 10-ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்
ஹைதராபாத்: "2 லட்சம் கேஷ், ஒரு லட்சம் செக்.. ஒழுங்கா 3 லட்சம் ரூபாய் பணம் தரலேன்னா, உன் மகனை கொன்னுடுவேன்" என்று கடத்தல்காரன் போனில் மிரட்டவும், பெற்றோர் உட்பட போலீசாரும் பதறிவிட்டனர். ஆனால், போலீசாரை பார்த்து கடத்தல்காரன் ஷாக் ஆக.. கடத்தல்காரனை பார்த்து போலீசாரும் ஷாக் ஆன சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள மியாபேட் பகுதியில் வசித்து வருபவர் ராஜு. இவரது மகன் அர்ஜுன்.. வயது 7 ஆகிறது! அவன் நேற்று சாயங்காலம் வீட்டு முன்னாடி விளையாடி கொண்டிருந்தான்.. கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் காணவில்லை.. அதனால், பதறிய பெற்றோர்.
அக்கம் பக்கம் வீடுகள், நண்பர்கள் வீடுகளில் தேடினார்கள். அப்போதும் அர்ஜுன் கிடைக்கக்கவில்லை. அந்த சமயத்தில் ராஜுவுக்கு ஒரு போன் வந்தது. அதில், "உன் பையனை நான்தான் கடத்தி வெச்சிருக்கேன்.. 3 லட்சம் ரூபாய் தந்தால் அவனை விட்டுடுடறேன்.. இல்லைன்னா, கொலை பண்ணிடுவேன்" என்று மிரட்டல் வந்தது.
இதனால் மேலும் பதறிய ராஜு, உடனடியாக மியாட்பூர் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசாரும் வழக்கு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது திரும்பவும் போன் வந்தது.. அபபோது பணத்தை எப்படி தர வேண்டும், எங்கே தர வேண்டும் என்று ராஜு பேச்சு கொடுக்க, செல்போன் டவர் மூலம் கடத்தல்காரன் இருக்கும் இடத்தை போலீசார் அப்போதே கண்டுபிடித்துவிட்டனர்.
"2 லட்சம் கேஷ், ஒரு லட்சம் செக்.. இப்படி 3 லட்சத்தையும் தந்துட்டீங்கன்னா, பையனை விட்டுடறேன்" என்றான் கடத்தல்காரன். அதற்கு ராஜு, உடனே கையில் 3 லட்சம் ரூபாய் இல்லை.. ஒரு மணி நேரம் டைம் தாங்க... நீங்க சொன்ன இடத்துக்கே பணத்துடன் வந்துவிடுகிறேன் என்றார்.
இந்த ஒரு மணி நேர இடைவெளியில், கடத்தல்காரன் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து விட்டனர் போலீசார்.. போலீசாரை பார்த்து கடத்தல்காரன் ஷாக் ஆக.. கடத்தல்காரனை பார்த்து போலீசாரும் ஷாக் ஆனார்கள்!
காரணம், அந்த கடத்தல்காரன் 10 வகுப்பு படிக்கும் மாணவன், வயது 14 என்றும் தெரியவந்தது. இப்போது அந்த மாணவனை கைது செய்த போலீசார் விசாரித்து வருகிறார்கள்.