கணவருடன் சண்டை.. கடும் விரக்தி.. விபரீத முடிவு.. தாய்-5 மகள்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
ராய்ப்பூர்: குடும்ப தகராறு காரணமாக சத்தீஸ்கரை சேர்ந்த பெண், தனது 5 மகள்களுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுண்ட் மாவட்டம் பெம்ச்சா கிராமத்தைச் சேர்ந்தவர் உமா சாஹு (45). இவருக்கு திருமணமாகி அன்னபூர்ணா (18), யசோதா (16), பூமிகா (14), கும்கம் (12), மற்றும் துளசி (10) ஆகிய 5 மகள்கள் உள்ளனர்.
குடும்ப தகராறு
உமா சாஹுக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு எற்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் தினமும் சண்டை போடுவது வழக்கமாகி விட்டது. இந்த நிலையில் நேற்று இரவும் கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் உமா சாஹு கடும் விரகதியில் மூழ்கினார்.
விபரீத முடிவு
''வயசுக்கு வந்த பெண்களை வைத்துக் கொண்டு தினமும் இப்படி சண்டை போட்டு இருக்கிறது நல்லாவா இருக்கிறது'' என்று அவரது மனம் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தது. இதனால் விபரீத முடிவு எடுக்க திட்டமிட்டார் உமா சாஹு. இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு தனது 5 மகள்களையும் அழைத்து வீட்டை விட்டு வெளியே சென்றார்.
ரயில் முன் பாய்ந்து தற்கொலை
மகாசமுண்ட் மற்றும் பெல்சொண்டா ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாள பகுதிக்கு மகள்களை கூட்டி சென்ற உமா சாஹு, ''நம்மால் நிம்மதியாக வாழ முடியவில்லை. இனி இருந்து என்ன செய்ய போகிறோம்'' என்று மகள்களிடம் கூறினார். இதனை தொடர்ந்து உமா சாஹு மற்றும் அவரது மகள்கள் 5 பேரும் சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
சோகத்தில் மூழ்கிய கிராமம்
ரயில் மோதிய வேகத்தில் அவர்களது 5 பேரின் உடல்களும் அப்பகுதியில் சிதறின. இது குறித்து தகவல் அறிந்ததும் மகாசமுண்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தாய் மற்றும் 5 மகள்களின் உடல்களை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக பெண் 5 மகள்களுடன் உயிரை மாய்த்துக் கொண்டது பெம்ச்சா கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.