நடிகர் மோகன் பாபு திடீர் ஆக்ரோஷம்.. பத்திரிகையாளர்களை விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு
ஹைதராபாத்: நடிகர் மோகன் பாபுவுக்கும், அவரது மகன் மனோஜ் மஞ்சுவுக்கு இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களின் மைக்கை பிடுங்கி நடிகர் மோகன் பாபு விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவை சேர்ந்தவர் நடிகர் மோகன் பாபு. தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். மோகன் பாபுவுக்கு தற்போது 72 வயது ஆகிறது. பழம்பெருமை மிக்க நடிகரான இவர் தெலுங்கு, தமிழ் உள்பட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‛சூரரை போற்று' திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருப்பார். மோகன் பாபுவுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் தான் மகன் மனோஜ் மஞ்சு மற்றும் நடிகர் மோகன் பாபு இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மோகன் பாபு ஹைதராபாத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதில் தனது மகன் மனோஜ் மஞ்சு இருந்து தனக்கும், தனது சொத்துக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மகன் மனோஜ் மஞ்சு மருமகள் மோனிகா ஆகியோர் எனது வீட்டை அபகரிக்க முயன்றனர். 30க்கும் மேற்பட்டவர்களுடன் வந்து அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் என்று கூறியிருந்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டு மகன் மோகன் மஞ்சு முற்றிலுமாக மறுத்துள்ளார். இருப்பினும் மோகன் பாபு புகார் மீது போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் இன்று இரவில் மனோஜ் மஞ்சு உள்பட சிலர் ஜல்பல்லியில் உள்ள மோகன் பாபுவின் வீட்டுக்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் அங்கு செய்தி சேகரிப்பதற்காக குவிந்தனர். இந்த வேளையில் வீட்டை விட்டு வெளியே வந்த மோகன் பாபு பத்திரிகையாளர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.
சொத்து பிரச்சனை பற்றி கேட்க முயன்ற பத்திரிகையாளர்களிடம் மைக்கை பிடுங்கி அவர் தாக்கினார். இதனால் பத்திரிகையாளர்கள் பயந்துபோய் ஓடினர். ஆனாலும் விடாத நடிகர் மோகன் பாபு பத்திரிகையாளர்களை விரட்டி விரட்டி தாக்க முயன்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே நடிகர் மோகன் பாபுவின் செயலுக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மோகன் பாபு தனது செயலுக்கு பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று இரவில் பத்திரிகையாளர்கள் வீட்டு முன்பு கோஷமிட்டனர். இந்த சம்பவத்தால் மோகன் பாபு வீட்டில் இரவு முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பாதுகாப்பு பணிக்காக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications