ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுனை தொடர்ந்து போலீஸிடம் சிக்கிய நாக சைதன்யா.. இவர்களே இப்படி செய்யலாமா?
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் நாக சைதன்யா ரூ 700 அபராதம் செலுத்தினார்.
வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதால் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட நன்மைகள் உள்ள போதிலும் கடத்தல், பலாத்காரம், விபச்சாரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு இது சாதகமாகவே உள்ளன.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் கார்களில் உள்ள கருப்பு ஸ்டிக்கர்களை நீக்க வேண்டும் என கடந்த 2014ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. வாகனங்களில் கண்ணாடிகளில் வெளிப்படைத்தன்மை இருத்தல் அவசியம் என்ற உத்தரவு அமலில் உள்ளது.

போக்குவரத்து போலீஸார்
இந்த உத்தரவை கடைப்பிடிக்காதவர்களிடம் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்து வருகிறார்கள். அந்த வகையில் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போக்குவரத்து போலீஸார் கடந்த மார்ச் மாதம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிக அளவில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு கார் வந்தது.

ஜூனியர் என்டிஆர் கார் தடுத்து நிறுத்தம்
அந்த காரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். விசாரணையில் அந்த கார் ஜூனியர் என்டிஆருக்கு சொந்தமான கார் என தெரியவந்தது. ஆனால் அந்த காரில் அவர் இல்லை. அவரது மகனும் வேறு சிலரும் இருந்தனர். இதையடுத்து கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியதால் அபராதம் விதித்தனர். இதையடுத்து அவருக்கு ரூ 700 அபராதம் விதிக்கப்பட்டது.

அல்லு அர்ஜுனின் சொகுசு கார்
கடந்த 7ஆம் தேதி ஹைதராபாத் சந்தை அருகே ரேஞ்ச் ரோவர் சொகுசு காரின் கண்ணாடியில் கருப்பு நிற பிலிம் ஒட்டியிருந்தது. அதை தடுத்த போலீஸார் விசாரித்த போது நடிகர் அல்லு அர்ஜுனின் கார் என தெரியவந்தது.இந்த சம்பவம் நிகழ்ந்து முழுதாக ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்கு இன்னொரு நடிகரும் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார்.

நாக சைதன்யாவுக்கு அபராதம்
ஹைதராபாத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவிட்டு நாக சைதன்யா ஜூப்ளி ஹில்ஸ் பகுதிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரிலும் கருப்பு நிற பிலிம் ஒட்டப்பட்டிருந்தது. இதையடுத்து நாக சைதன்யாவுக்கு ஹைதராபாத் போலீஸார் ரூ 700 அபராதம் விதித்து சல்லானை வழங்கினர். மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கக் கூடிய நடிகர்கள் இது போல் போக்குவரத்து விதிகளை மீறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சு மனோஜ். திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், நந்தமுரி கல்யாண் ராம் ஆகியோரும் டிராபிக் விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications