"தெலுங்கானா"வில் 40 ஆண்டு சாம்பல் புதைகுழியில் இருந்து 64 தொகுதிகளுடன் மீண்டு எழுந்த காங்கிரஸ்!
ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சியின் 40 ஆண்டுகால சரித்திரத்தில் "தெலுங்கானா"வில் முதல் முறையாக 64 இடங்களை கைப்பற்றி இருப்பது அக்கட்சியின் மூத்த தலைவர்களை பெருமிதப்பட வைத்திருக்கிறது.
ஆந்திரா என்கிற ஒருங்கிணைந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருக்கிறது. 1989, 2004-ம் ஆண்டுகளில் கூட ஒருங்கிணைந்த ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது.

தெலுங்கானாவும் காங்கிரஸும்: 1989,2004 அப்போதைய தேர்தல்களில் ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகளில்தான் காங்கிரஸ் கட்சியால் அதிக இடங்களக் கைப்பற்ற முடிந்தது. தெலுங்கானா பிராந்தியத்தில் அன்று காங்கிரஸால் அப்படி எல்லாம் எளிதாக வென்றுவிட முடியாத நிலைதான் இருந்தது. 1985-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில்தான் தெலுங்கானாவில் அதிகபட்சமாக 58 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது.
2014 மாநில உதயம்: இத்தனைக்கும் 2014-ம் ஆண்டு தெலுங்கானா தனி மாநிலத்தை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் உருவாக்கியது. அப்போது மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தெலுங்கானாவின் தாய் என்றெல்லாம் போற்றி புகழ்ந்து கோவிலை கூட கட்டினர் தெலுங்கானா மக்கள். ஆனால் ஓட்டு மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு போடவே இல்லை.
தெலுங்கானாவில் புறக்கணிக்கப்பட்ட காங்கிரஸ்: தெலுங்கானா தனி மாநிலம் உருவான பின்னரான தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 2014-ல் 21 இடங்களும் 2019-ல் அதைவிட குறைவாக 19 இடங்களும்தான் கிடைத்தன. தற்போது முடிவடைந்த தேர்தலின் தொடக்கத்திலும் கூட ஆளும் பிஆர்எஸ் கட்சி/ பாஜக என்ற மோதல்தான் இருந்தது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலமே கிடையாது என்கிற இருள் சூழ்ந்த நிலைதான் இருந்தது. ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்ட போதுகூட காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் அதனை ஒருங்கிணைக்க முடியாத பரிதாப நிலையில்தான் இருந்தனர்.
40 ஆண்டுகளுக்கு பின்: அதாவது தெலுங்கானா மாநிலத்தில் சாம்பலில்தான் புதைந்து கிடந்தது காங்கிரஸ். கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற அமோக வெற்றி, தேர்தல் வாக்குறுதிகளை அடுத்தடுத்து கர்நாடகாவில் நிறைவேற்றியது, சோனியா- ராகுல், பிரியங்கா பிரசாரம் என இடைவிடாத சூறவாளி தாக்குதல்கள், ரேவந்த் ரெட்டியை முன்னிறுத்திய வியூகம் அத்தனையும் இப்போது தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அமோக அறுவடையை தந்துவிட்டது. தெலுங்கானாவில் 64 இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்றிருப்பது அதன் இடைவிடாத தொடர் முயற்சிகளுக்கு வெற்றி. 1985-ம் ஆண்டுக்குப் பின்னர் தெலுங்கானா பிராந்தியத்தில் இன்று தனி மாநிலம்- காங்கிரஸ் ஆழமாக வேரூன்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருப்பது அக்கட்சியின் மூத்த தலைவர்களை ஆனந்த கண்ணீருடன் பெருமிதப்பட வைத்திருப்பது மிகையல்ல என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications