முற்றும் மோதல்.. நீங்கள் ஆளுநரா? பாஜக தலைவரா?.. தமிழிசைக்கு செக் வைக்கும் தெலுங்கானாவின் டிஆர்எஸ்?
ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கும் மாநில முதல்வர் சந்திரசேகர ராவிற்கும் இடையே மோதல் மீண்டும் முற்றி வருகிறது.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது செப்டம்பர் மாதம் வந்தால் அவர் ஆளுநராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும்.
குமரி அனந்தனின் மகளான தமிழிசை சவுந்திரராஜன் அனைத்து கட்சியினருடனும் அன்பான நிலைப்பாட்டையும் மரியாதையையும் கொண்டவர். குமரி அனந்தனின் மகளுக்கு அரசியல் நாகரிகத்தை கற்று தர வேண்டுமா என்ன என்ற அளவுக்கு கருணாநிதி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் நற்பெயர் எடுத்தவர்.
தீவிர அரசியலுக்கு திரும்புகிறாரா தமிழிசை? தெலுங்கானா “சூப்பர் முதல்வரா நான்”? தமிழிசையின் பரபர பதில்
அரசியல் ரீதியிலான விமர்சனங்கள்
அரசியல் ரீதியிலான விமர்சனங்களையும் நாகரிகமான கருத்துகளை முன் வைத்தே வைப்பவர். எந்த சூழலிலும் தரக்குறைவான வார்த்தைகளை தமிழிசை பயன்படுத்தியதில்லை. தெலுங்கானா ஆளுநர், புதுவை துணை நிலை ஆளுநர் பதவிகளில் தனக்கு அதிகாரத்திற்குள்பட்ட விஷயங்களை அவர் செய்வதாகவே தெரிவிக்கிறார்.
முதல்வர் கேசிஆர்
எனினும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கும் தமிழிசைக்கும் இடையே முட்டல் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி திட்டங்களை தமிழிசை ஆய்வு செய்ததெல்லாம் கேசிஆருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஆளுநர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் பெட்டியை வைத்து மாநில நிர்வாகத்தில் உள்ள குறைகளை இந்த பெட்டியில் போடுமாறு ஆளுநர் கூறியது கேசிஆருக்கு உச்சபட்ச கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
ஆளுநருக்கான ஒதுக்கீடு
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆளுநருக்கான ஒதுக்கீட்டில் கவுசிக் ரெட்டியை சட்ட மேலவை உறுப்பினராக நியமனம் செய்ய தமிழிசையிடம் தெலுங்கானா அரசு பரிந்துரை செய்தது. ஆனால் இதை ஆளுநர் தமிழிசை மறுத்தார். எனினும் தமிழிசையிடம் வாக்குவாதம் செய்ய விரும்பாத கேசிஆர், 4 மாதங்கள் கழித்து எம்எல்ஏவுக்கான ஒதுக்கீட்டின் படி கவுசிக் ரெட்டியை சட்டமேலவை உறுப்பினராக்கினார்.
கேசிஆர் கோபம்
இதிலிருந்தே கேசிஆர் ஆளுநர் மாளிகையில் நடக்கும் விழாக்களுக்கு செல்வதை தவிர்த்தார். முன்பு ஈஎஸ்எல் நரசிம்மன் ஆளுநராக இருந்த போது அங்கு நடக்கும் அனைத்து விழாக்களிலும் கேசிஆர் தவறாமல் கலந்து கொள்வார். கடந்த மார்ச் 3 ஆம் தேதி தெலுங்கானா சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தில் உரையாற்ற ஆளுநர் தமிழிசைக்கு அழைப்பு விடுக்கவே இல்லை.
மாநில நிர்வாகம்
இந்த நிலையில் ஆளுநர் தமிழிசை, ஆளுநர் மாளிகையின் வெளியே மீண்டும் புகார் பெட்டியை வைத்து அதில் மாநில நிர்வாகம் குறித்த புகார்களை போடலாம் என தமிழிசை அறிவித்துள்ளார். அது கேசிஆருக்கு எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போல் இருந்தது. இதுகுறித்து தெலுங்கானா மூத்த தலைவர் சீனிவாச யாதவ் கூறுகையில், மரியாதை கொடுத்து மரியாதையை வாங்க வேண்டும்.
பாஜக தலைவர்
ஒருவர் ஒரே நேரத்தில் பாஜக தலைவராகவும் ஆளுநராகவும் இருக்க முடியாது. ஆளுநர் மருத்துவமனையில் தடுப்பூசி திட்டத்தை ஆய்வு செய்வதை பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை. ஆனால் தான் சார்ந்த கட்சியுடன் டிஆர்எஸ் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக அரசியல் சாயம் பூசப்பட்ட அறிக்கைகளை வெளியிடும் போது ஆளுநருக்கும் அரசுக்குமான உறவு எப்படி சுமுகமாக இருக்கும்.
முதல்வர் குறித்து தமிழிசை விமர்சனம்
ஆளுநர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த முடியாது, அரசியல் கருத்துகளை சொல்ல முடியாது. பெண் ஆளுநர் என்பதால் நாங்கள் உச்சபட்ச மதிப்பை அவர் மீது வைத்திருக்கிறோம். ஆனால் அவர் வைக்கும் கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் பொறுப்பில்லாமல் உள்ளன. எங்களை காயப்படுத்துகிறது. பாஜக தலைவராக எங்கள் அரசு மீது அவர் விமர்சனம் செய்ய வேண்டுமானால் அவர் ஆளுநராக இருக்க கூடாது. தெலுங்கானா முதல்வருடன் இணைந்து பணியாற்றுவது என்பது கடினமான ஒன்று என அண்மையில் தமிழிசை சொன்ன கருத்துகள் தேவையற்றவை என ஸ்ரீனிவாச யாதவ் தெரிவித்தார்.