அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்.. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
ஹைதராபாத்: புஷ்பா 2 படம் பார்க்க அல்லு அர்ஜுன் சென்றதால் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கில் ஹைதராபாத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அவரை பரிசோதனை செய்வதற்காக ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் தரப்பு வாதத்தை நீதிபதி ஏற்கவில்லை.
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த விழாவில் புஷ்பா 2 விழாவிற்கு பெரும் கூட்டம் கூடியதை பார்த்து திரையுலகமே ஆடிப்போனது. இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புக்கு நடுவே புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5ம் தேதி உலகம் முழுதும் பல ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு ஒருங்கிணைந்த ஆந்திராவில் மட்டுமின்றி எல்லா மொழியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

முன்னதாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் ஆர்.டி.சி. கூட்டுரோடு சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் கடந்த டிசம்பர் 5ம் தேதி புஷ்பா-2 திரைப்பட வெளியீடு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. படத்தில் நடித்த தெலுங்கின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழுவினர் தியேட்டரில் வந்து படத்தை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியதால், ஆர்.டி.சி. கூட்டுரோடு சாலையில் கூட்ட நெரிசல் மிகவும் அதிகமானது.
அல்லு அர்ஜுனை பார்க்கவும். சிறப்புக்காட்சியை பார்க்கவும், 35 வயதாகும் ரேவதி என்ற பெண் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் தியேட்டருக்கு வந்திருந்தார். படம் திரையிட தயாராக இருந்த சிறிது நேரத்திற்கு முன்பு கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் அதிகமாகியது. இதில் ரேவதியும், மகன் ஸ்ரீதேஜும் சிக்கி தடுமாறினார்கள். அவரது கணவர் பாஸ்கர் மற்றொரு குழந்தையை நெரிசலில் இருந்து தற்காத்தபடி சென்றுள்ளார்.

ஆனால், ரசிகர் கூட்டத்தினர் நெருக்கித் தள்ளியதில் ரேவதி மயக்கம் அடைந்தார். சிறுவன் ஸ்ரீதேஜ் காயம் அடைந்தான். அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கூட்ட நெரிசலில் சிக்கி பெண் இறந்தததை அடுத்து, தியேட்டர் நிர்வாகத்தினர் மீது கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் திரையரங்க உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் நடிகர் அல்லு அர்ஜுன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், அவரையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
அல்லு அர்ஜுன் மருத்துவ பரிசோதனைக்காக ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் நபர்கள் பொதுவாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையிலேயே அவரை அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிந்தது.
அதன்பிறகு உடனடியாக நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது வழக்கின் விசாரணைக்கு அல்லு அர்ஜுன் ஒத்துழைப்பார். எப்ஐஆரை ரத்து செய்யக்கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது. வழக்கு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறினர். ஆனால் அவர்களின் தரப்பு கோரிக்கையை நீதிமன்றம் ஏற்காத நிலையில் அல்லு அர்ஜுனை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications