மேடையில் மாப்பிள்ளைக்கு வாழ்த்து சொன்ன அமேசான் அதிகாரி.. அடுத்த நொடி பறிபோன உயிர்.. என்ன நடந்தது?
ஹைதராபாத்: இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. நண்பரின் திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்ற அமேசான் ஊழியர் மேடையிலேயே இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் இப்போது நடந்துள்ளது.
முன்பெல்லாம் வயதானவர்களிடையே தான் மாரடைப்பு ஏற்படுவதாக நாம் சொல்லிக் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் நாம் இளைஞர்கள் கூட மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பால் உயிரிழப்பதாக அடிக்கடி செய்திகளைப் பார்க்கிறோம்.

இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு பின் இளைஞர்களுக்கு இடையே நடக்கும் மாரடைப்புக்கு கூட தொடர்பு இருப்பதாக சில வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஷாக் சம்பவம்: இது தொடர்பான ஆய்வுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இளைஞர்களிடையே மாரடைப்பும் கணிசமாக அதிகரித்துள்ளது. அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் இப்போது ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூலில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் மணமக்களை வாழ்த்த வந்த நபருக்கு திடீரென இதய செயலிழப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திருமண நிகழ்வில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

என்ன நடந்தது: திருமண நிகழ்வின் மேடையில், அந்த நபர் திருமண ஜோடிக்குப் பரிசை வழங்குகிறார். அங்குக் கூடியுள்ள அனைவரும் உற்சாக கரகோஷத்தை எழுப்பும் சூழலில் திடீரென அந்த நபர் சமநிலையை இழக்கத் தொடங்குகிறார். அந்த நபரின் பெயர் வம்சி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் அந்த நபர், தனது நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகப் பெங்களூரில் இருந்து கர்னூலின் பெனுமடா கிராமத்திற்கு வந்துள்ளார்.
உயிரிழப்பு: வம்சி கொடுத்த பரிசை மணமகன் வாங்குகிறார். அதை மேடையிலேயே அவர் ஆர்வமாகப் பிரித்துப் பார்க்கும் போது, வம்சி மெல்ல மெதுவாக இடது பக்கம் சாய்கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் நின்றவர்கள் அவரை தாங்கி பிடித்தனர். இதனால் அவர் கீழே விழவில்லை. இருப்பினும், அவர் மயக்கமடைந்த நிலையில், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். இருப்பினும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அங்கு அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர்களிடையே ஏற்படும் மாரடைப்பு என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது, வாக்கிங் செல்லும் போது என எதிர்பாராத நேரங்களில் இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்கள்: இது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த கார்டியலஜிஸ்ட் டாக்டர் ரவி குப்தா கூறுகையில், "நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வோர், நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு இதுபோல திடீரென மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். காற்று மாசுபாடு, மன அழுத்தம், அதிக உடற்பயிற்சி மற்றும் ஸ்டெராய்டுகள் பயன்பாடு ஆகியவை இளம் வயதினருக்கு இடையே மாரடைப்பை அதிகரிக்கிறது.
பொதுவாகவே மரபணு ரீதியாக இந்தியர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அப்படியிருக்கும் போது நாம் மேற்கத்திய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வதால் ஆபத்தை மேலும் அதிகரிக்கவே செய்கிறது" என்று அவர் குறிப்பிடுகிறார். உடலை ஆக்டிவாக வைத்து, தினசரி உடற்பயிற்சியை செய்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.












Click it and Unblock the Notifications