இன்னைக்கு ஒரு புடி! வருங்கால மருமகனுக்கு 365 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்.. அசந்துபோன மாப்பிள்ளை
ஹைதராபாத்: ஆந்திராவில் வீட்டிற்கு வந்த வருங்கால மருமகனுக்கு ஒரு வருடத்தில் மொத்தம் 365 நாட்கள் இருப்பதைக் கணக்கில் கொண்டு 365 வகையான உணவுகளை வழங்கியுள்ளார்.
பொதுவாகத் திருமணத்திற்குப் பின்னர் மணப்பெண் வீட்டிற்குச் செல்லும் மாப்பிள்ளைக்கு நல்ல உபசரிப்பு கிடைக்கும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது ஆந்திராவில் நடந்துள்ளது.
இங்கு ஆந்திராவில் வருங்கால மாப்பிள்ளைக்கு அளிக்கப்பட்ட உபசரிப்பு அனைவரும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. இது தொடர்பாக ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

365 உணவுகள்
ஆந்திராவில் வீட்டிற்கு வந்த வருங்கால மருமகனுக்கு அவரது மாமியார் மெகா உபசரிப்பை அளித்துள்ளார். ஒரு வருடத்தில் மொத்தம் 365 நாட்கள் இருப்பதைக் கணக்கில் கொண்டு 365 வகையான உணவுகளை வருங்கால மருமகனுக்கு வழங்கியுள்ளார். இது குறித்து பெண் வீட்டார் கூறுகையில், "எங்கள் வருங்கால மருமகன் மீதான எங்கள் அன்பைக் காட்ட, ஒரு வருடத்தில் 365 கணக்கிட்டு அதற்கேற்ப 365 வகையான உணவுகள் ஏற்பாடு செய்துள்ளோம்" என்றார்.

பிரம்மாண்ட விருந்து
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சாய்கிருஷ்ணா என்பவர் தங்க வியாபாரியான வெங்கடேஸ்வர ராவ் -மாதவி தம்பதியின் மகள் குந்தவி ஆகியோருக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இன்னும் சில வாரங்களில் இவர்களுக்குத் திருமணம் நடைபெறுகிறது. இதனிடையே மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வீட்டிற்கு வந்த தங்களின் வருங்கால மருமகனுக்கு இந்த பிரம்மாண்ட விருந்தை அவரது மாமியார் அளித்துள்ளார்.

30 வகைகள்
திருமணத்திற்கு முன் பெண்ணின் தாத்தா- பாட்டி தங்கள் பேத்தியைத் திருமணம் செய்து கொள்ளும் இளைஞருக்கு விருந்து அளிக்க ஏற்பாடு செய்தனர். அப்போது பெண்ணின் பெற்றோரும் இதில் தலையிட அது மிகப் பிரம்மாண்டமான விருந்தாக மாறிவிட்டது. இந்நிகழ்ச்சிக்காக 30 வகையான குழம்பு, சாதம், பிரியாணி, பாரம்பரிய கோதாவரி இனிப்புகள், சூடான மற்றும் குளிர் பானங்கள், பிஸ்கட், பழங்கள், கேக் எனச் செய்யப்பட்டு மாப்பிள்ளைக்கு அளிக்கப்பட்டது.

விருந்தோம்பல்
இது தொடர்பான ஃபோட்டோ தான் இப்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாகவே கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் அன்பான விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் கொரோனா காலத்தில் பலரும் உணவின்றி தவித்து வரும் நிலையில், ஒரு நபருக்கு எதற்கு இத்தனை வகையான உணவுகள் என்றும் இவற்றை அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கியிருக்கலாம் என்றும் சில நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications