நடிகைக்கு துன்புறுத்தல்.. ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்! ஆந்திராவில் பரபரப்பு.. என்ன நடந்தது?
ஐதராபாத்: அதிகாரிகள் தன் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்து தன்னை துன்புறுத்தியதாக நடிகை காதம்பரி புகார் அளித்தார். இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதையடுத்து ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் உயர் போலீஸ் அதிகாரிகள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி, மலையாளம், தமிழ், கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளவர் நடிகை காதம்பரி ஜெத்வானி. ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். மும்பையில் பிரபலமான மாடலாகவும் நடிகையும் இருந்து வரும் காதம்பரி ஜெத்வானி அளித்த புகார் ஒன்றில் ஆந்திராவில் உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-

மும்பையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக தான் கொடுத்து இருந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும், இல்லையெனில் பல்வேறு பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று போலீசார் தன்னை மிரட்டியதாக காதம்பரி ஜெத்வானி குற்றம் சாட்டியிருந்தார். முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் அளித்த மோசடி புகாரில் காதம்பரியை போலீசார் கைது செய்தனர்.
அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த காவல் அதிகாரி, தனக்கு கீழ் பணியாற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகளிடம், நடிகையை கைது செய்யுமாறு உத்தரவிட்டு இருக்கிறார். அதிகாரிகள் தன் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்து தன்னை துன்புறுத்தியதாக நடிகை காதம்பரி புகார் அளித்தார். தன்னையும் தனது குடும்பத்தினரையும் சட்டவிரோதமாக தடுப்புக்காவலில் வைத்து இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
ஜெத்வானி வழக்கறிஞர் கூறுகையில், "ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வித்யாசாகர் என்பவர் நில ஆவணங்களை மோசடியாக சித்தரித்து ஜெத்வானியையும் அவரது குடும்பத்தினரையும் சிக்க வைத்ததாகவும், பல நாட்களுக்கு ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய கூட போலீசார் அவரை அனுமதிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்தபுகாரின் அடிப்படையில் தான், வழக்குப்பதிவு செய்த ஆந்திர போலீசார், விசாரனைக்கு பிறகு உயர் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:- முன்னாள் உளவுத்துறை தலைவர் பி சீதாராம் ஆஞ்சநேயலு (டிஜி ரேங்க்), முன்னாள் விஜயவாடா காவல் ஆணையர் கந்தி ராணா டாடா (ஐஜி ரேங்க்) முன்னாள் துணை காவல் ஆணையர் விஷால் குன்னி (எஸ்பி ரேங்க் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள மூன்று அதிகாரிகளும் பதவியில் இல்லாமல் தினமும் இருமுறை டிஜிபி அலுவலகத்தில் வந்து வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் உயர் போலீஸ் அதிகாரிகள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications