காதலிக்க மறுத்த ‛இன்ஸ்டா’ தோழி படுகொலை.. வாலிபருக்கு தூக்கு தண்டனை... ஆந்திரா நீதிமன்றம் பரபர தீர்ப்பு
ஐதராபாத்: ஆந்திராவில் காதலிக்க மறுத்த இன்ஸ்டாவில் தோழியான கல்லூரி மாணவியை கத்தியால் 9 இடங்களில் குத்தி கொடூரமாக கொலை செய்த வாலிபருக்கு நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திராவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் எட்டரை மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் ரம்யா. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பிடெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். குண்டூரை சேர்ந்தவர் சசிகிருஷ்ணா.
இந்த சசிகிருஷ்ணா இன்ஸ்டா மூலம் ரம்யாவிடம் அறிமுகமானார். ஒரே ஊர் என்பதால் ரம்யா அவரிடம் பேச துவங்கி உள்ளார்.

காதலுக்கு மறுப்பு
இதையடுது்து ரம்யாவிடம் அவர் திடீரென காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு ரம்யா மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் விடாத சசிகிருஷ்ணா அவரை பின்தொடர்ந்து காதலிக்கும்படி வலியுறுத்தி வந்தார். ரம்யா தொடர்ந்து அவரை கண்டுகொள்ளவில்லை. மேலும் காதலிக்கும்படி தன்னிடம் தொல்லை செய்யக்கூடாது என கடுமையாக எச்சரித்தார்.

வாக்குவாதம்
இதனால் கோபமடைந்த சசிகிருஷ்ணா அவரை கொலை செய்ய திட்டமிட்டார். 2021 ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அருகே உள்ள ஓட்டலுக்கு ரம்யா சென்றார். அப்போது அங்கு காத்திருந்த சசிகிருஷ்ணா அவரை வழிமறித்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தினார். இதற்கு ரம்யா உடன்படவில்லை. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மாணவி குத்திக்கொலை
இந்த வாக்குவாதம் முற்றவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரம்யாவை அவர் சரமாரியாக குத்தினார். 9 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. தடுக்க சென்ற மக்களையும் சசிகிருஷ்ணா கத்தியை காட்டி மிரட்டிவிட்டு ஓடினார். அக்கம்பக்கத்தினர் ரம்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.

தூக்கு தண்டனை
இதுகுறித்து குண்டூர் போலீசார் கொலை வழக்குப்பதிந்து சசிகிருஷ்ணாவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு குண்டூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முடிவடைந்தது. மொத்தம் 36 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது. கொலை நடந்த சம்பவம் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது முக்கிய ஆதாராமாக எடுத்து கொள்ளப்பட்டது. மேலும் ரம்யாவை திட்டமிட்டே சசிகிருஷ்ணா தீர்த்துக்கட்டியது உறுதியானது. அவருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி ராம்கோபால் தீர்ப்பு கூறினார்.

எட்டரை மாதத்தில் தீர்ப்பு
முன்னதாக இந்த கொலை சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. இந்நிலையில் தான் எட்டரை மாதங்களில் இந்த வழக்கில் கொலை செய்த நபர் சசிகிருஷ்ணாவுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை மாணவியின் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications