6 ரசகுல்லா சாப்பிட்ட ஹைதராபாத் இளைஞருக்கு பக்கவாதம்.. அப்பல்லோ மருத்துவர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர், வெறும் ஐந்து முதல் ஆறு ரசகுல்லாக்களைச் சாப்பிட்ட பிறகு திடீரென உடல் பேரலைசஸ் ஆகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சாப்பிட்ட இனிப்புகள் கெட்டுப்போகவில்லை, அப்படியிருந்தும் அவருக்கு எப்படி முடக்குவாதம் ஏற்பட்டது என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார் விரிவான விளக்கத்தை அளித்திருக்கிறார். அந்த விளக்கத்தை அப்படியே பார்ப்போம்.

என்ன நடந்தது?

அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார் கூறுகையில், "ஹைதராபாத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞருக்கு ரசகுல்லா சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே இரண்டு கைகளும், இரண்டு கால்களும் கடுமையாகப் பலவீனமடைந்து நகர முடியாமல் போனது. கடந்த ஆறு மாதங்களில் இதுபோன்று மூன்று முறை அவருக்கு நடந்திருக்கிறது.. ஒவ்வொரு முறையும் தற்காலிகமாகப் படுக்கையில் முடங்கும் அவர், சில மணி நேரங்களில் தானாகவே குணமடைந்துவிடுவார்

இது உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அல்ல என்பதை உறுதியாக சொல்ல முடியும்.. அவருக்குப் பேச்சுத்திறன், பார்வை அல்லது சிறுநீர்ப்பைக் கட்டுப்பாட்டில் எந்தப் பாதிப்பும் இல்லை; உடல் பலவீனம் மட்டுமே இருந்தது.

மருத்துவக் காரணம்

நரம்பியல் சோதனைகளுக்குப் பிறகு, அவருக்கு 'ஹைப்போகலீமிக் பீரியாடிக் பேராலிசிஸ்' (HPP) எனும் பாதிப்பதை கண்டறிந்தோம். இந்த 'ஹைப்போகலீமிக் பீரியாடிக் பேராலிசிஸ்' ஏற்பட என்ன காரணம் என்று ஆய்வு செய்த போது, ரசகுல்லா போன்ற அதிக கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை உட்கொள்ளும்போது, உடலில் இன்சுலின் அளவு திடீரென உயர்கிறது. இந்த இன்சுலின் அதிகரிப்பு, ரத்தத்திலுள்ள பொட்டாசியத்தை செல்களுக்குள் தள்ளிவிடுகிறது. இதனால் ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு மிக வேகமாக குறைந்துவிடுகிறது. எனவே தசை இயக்கத்திற்குத் தேவையான பொட்டாசியம் ரத்தத்தில் குறையும்போது, தசைகள் வேலை செய்யாமல் உடல் முடங்கிப் போகிறது.

Apollo doctor explains how the man from Hyderabad became paralysis after eating six Rasgullas

பொட்டாசியம் குறைபாடு

அந்த இளைஞரின் ரத்தத்தைப் பரிசோதித்தபோது, பொட்டாசியம் அளவு 2.8 mEq/L ஆக மிகக் குறைவாக இருந்ததை கண்டுபிடித்தோம் (சாதாரண அளவை விட மிகக் குறைவு). அவருக்குப் பொட்டாசியம் சத்து அளிக்கப்பட்டவுடன் உடல்நிலை சீராகி உள்ளது. இந்த பொட்டாசியம் குறைவு என்பது ஒரு அறிகுறி மட்டுமே. அதன் பின்னணியில் இருந்த உண்மையான காரணம் 'ஹைப்பர் தைராய்டிசம்.

தைராய்டு பரிசோதனை

நாங்கள் அந்த இளைஞரை மேலும் பரிசோதித்தபோது, அவரது இதயத் துடிப்பு அதிகமாக இருந்தது. கண்கள் சற்று துருத்திக் கொண்டு காணப்பட்டன. கழுத்தில் வீக்கம் இருந்தது. தைராய்டு பரிசோதனையில் அவருக்கு அதிகப்படியான தைராய்டு சுரப்பு இருப்பது உறுதியானது. இதற்கு 'Thyrotoxic Hypokalemic Periodic Paralysis' என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். தமிழில் கூறுவது என்றால், தைராக்சின் மிகைப்பால் ஏற்படும் பொட்டாசியம் குறைவு சார்ந்த இடைவிட்டு வரும் பக்கவாதம் என்று அழைக்கலாம். இந்த பிரச்சனை குறிப்பாக இளம் ஆசிய ஆண்களுக்கு அதிகம் ஏற்படக்கூடியது.

ஜிலேபி - ரப்பரி சாப்பிட்ட ரவிக்கும் இதே நிலை

இதேபோன்ற மற்றொரு சம்பவத்தையும் டாக்டர் சுதிர் குமார் நினைவு கூர்ந்தார். ரவி என்ற 33 வயது இளைஞர், திருமண விசேஷங்களில் 'ஜிலேபி மற்றும் ரப்பரி' சாப்பிட்ட பிறகு பலமுறை படுக்கையில் முடங்கி இருக்கிறார்.. முதலில் இது சாதாரண உடல்நலக்குறைவு எனத் தவிர்த்துள்ளார். பின்னர் மருத்துவரின் ஆலோசனையின்படி, இனிப்பு சாப்பிட்ட பிறகு அவரைப் பரிசோதித்தபோது அவருக்கும் பொட்டாசியம் அளவு குறைவாக இருப்பதும், தைராய்டு பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.

மருத்துவரின் அறிவுரை

"அதிக கார்போஹைட்ரேட் கொண்ட உணவை உண்ட பிறகோ அல்லது உடற்பயிற்சிக்குப் பின் ஓய்வெடுக்கும் போதோ திடீரென உடல் பலவீனம் ஏற்பட்டால், உடனடியாக பொட்டாசியம் அளவைப் பரிசோதிக்க வேண்டும். தைராய்டு பாதிப்பு இருந்தால் அதற்கான முறையான சிகிச்சை எடுப்பதன் மூலம், இனி வரும் காலங்களில் இது போன்ற முடக்குவாதம் ஏற்படாமல் தடுக்கலாம்." இவ்வாறு டாக்டர் சுதிர் குமார் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+