அறிகுறி இல்லாத.... கொரோனா நோயாளிகளிடம் இருந்தும் தொற்று பரவும்... ஆய்வில் புதிய தகவல்!!
ஐதராபாத்: அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளிடம் இருந்தும் வைரஸ் பரவும். மேலும் அவர்களிடத்தில் இருக்கும் வைரஸூம் வீரியம் மிக்கதாக இருக்கும் என்று புதிய ஆய்வின் மூலம் இந்திய மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக அறிகுறி இல்லாமல் ஏற்படும் கொரோனா தொற்றில் இருந்து வைரஸ் பரவல் ஏற்படாது என்று கூறப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளும் இந்த விஷயத்தில் வெவ்வேறு கருத்துக்களை கூறிவருகின்றன. உலக சுகாதார நிறுவனமும் துவக்கத்தில் இவர்களால் வைரஸ் பரவாது என்று தெரிவித்து இருந்தது. பின்னர் அவர்களது இந்த அறிக்கையை திரும்பப் பெற்றனர். அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளிடம் இருந்தும் 40% தொற்று பரவும் என்று தெரிவித்தது.

இந்த நிலையில்தான் ஐதராபாத்தில் இருக்கும் டிஎன்ஏ பிங்கர்பிரிண்டிங் அண்ட் டயக்னாஸ்டிக் புதிய ஆய்வை மேற்கொண்டது. ஆய்வுக்கு 210 கொரோனா நோயாளிகள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இந்த ஆய்வு குறித்து மூலக்கூறு ஆய்வாளர் முரளிதரன் பாஷ்யம் கூறுகையில், ''அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளிடம் இருந்தும் நோய் தொற்று பரவும். நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும், எளிதில் இந்த வைரஸ் பரவி, பிற நோய்களையும் ஏற்படுத்தும்.
பெரும்பாலானவர்களுக்கு 20B Clade என்ற வைரஸ் மரபணு பரவி இருக்கிறது. மற்றவர்களுக்கு வேறு மரபணுவில் இருந்து பரவியுள்ளது. மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை 20B Clade என்ற புரோட்டீன் உருமாற்றம் பெற்ற வைரஸ் அதிகளவில் பரவி இருக்கிறது. வைரஸ் மரபணு மாற்றம் பெற்று இருக்கிறது.
தற்போது D614G என்ற புரோட்டீன் உருமாற்றம் பெற்ற வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது. இதற்கு வீரியம் அதிகம். தொற்று பரவலையும் அதிகரிக்கும். '' என்று தெரிவித்துள்ளார்.
இவர்கள் மேற்கொண்ட ஆய்விலும் நோயாளிகளிடம் அடிக்கடி வைரஸ் உருமாற்றம் அல்லது பிறழ்வுகள் ஏற்பட்டுள்ளது. இதுதான் மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது. அறிகுறி இல்லாமல் ஏற்பட்டு பின்னர் உருமாற்றம் பெறும்போது, நோயாளி பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நோய் எதிர்ப்பு சக்தி நிபுணர் சத்யஜித் ராத் கூறுகையில், ''கொரோனா தொற்று அறிகுறி இல்லாத நோயாளிகளிடம் இருந்தும் வைரஸ் பரவும். அவர்களிடமும் வைரஸின் வீரியம் அதிகமாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து அதிகளவில் தொற்று பரவி வருகிறது. இதுவரை அந்த மாநிலத்தில் 1.27 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை (நேற்று) மட்டும் 2,734 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு, 9 பேர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications