வீடியோ போட்டாரு.. ஜெயிலுக்கு போனாரு.. ரிலீஸ் ஆனாரு “ரிப்பீட்டு” - பாஜக எம்எல்ஏ மீண்டும் கைது
ஐதராபாத்: எந்த மதத்தையும் தான் இழிவுபடுத்தவில்லை என்றும் தனி நபர்களையே விமர்சித்ததாக மீண்டும் வீடியோ வெளியிட்ட தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பிரபல ஸ்டான்ட் அப் காமெடியனாக இருந்த முனவர் ஃபரூக்கி, இந்துத்துவ அமைப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஐதராபாத்தில் நடந்த ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனை அடுத்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வந்து இந்துத்துவாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் 2,000 க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் முனவர் ஃபரூக்கி அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

பாஜக எம்எல்ஏ
இந்த நிலையில் கோஷாமால் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங், முனவர் ஃபரூக்கி மற்றும் அவரது தாயாரை விமர்சித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். 10 நிமிடங்கள் 27 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவைபோல் நபிகள் நாயகம் குறித்து ராஜா சிங் அவதூறாக பேசினார். வீடியோவின் முடிவில் நான் பேசிய அனைத்தும் நகைச்சுவை என்று அவர் கூறி இருக்கிறார்.

கைது
இந்த நிலையில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய ராஜா சிங்கை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக திரண்ட அவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராஜா சிங் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்த ஐதராபாத் போலீஸ் கைது செய்தது.

கட்சியிலிருந்து சஸ்பெண்ட்
இந்த நிலையில் நேற்று ராஜா சிங்கை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக பாஜக அறிவித்தது. பாஜகவின் கட்சி விதிகளை மீறி ராஜா சிங் பேசி இருப்பதாகவும், அவரிடம் கட்சித் தலைமை மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கட்சியின் ஒழுங்கு கமிட்டியின் செயலாளர் ஓம் பதக் தெரிவித்து இருக்கிறார். மேலும் செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் ராஜா சிங் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

ஜாமினில் விடுவிப்பு
இந்த நிலையில் ராஜா சிங் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் ஜாமின் பெற்றி வெளியே வந்தார். இதனால் கொந்தளித்த பல்வேறு அமைப்பினர் கண்டன போராட்டங்களில் ஈடுபட்டனர். நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது ஐதராபாத் காவல்துறை தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 90 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

மீண்டும் வீடியோ
இந்த நிலையில் விடுதலையான உடனே மீண்டும் வீடியோ ஒன்றை ராஜா சிங் வெளியிட்டுள்ளார். அதில், "காவல்துறையினர் ஒவைசியின் பொம்மைகளாக உள்ளனர். ஒவைசியின் ஆதரவாளர்கள் கல்வீச அனுமதிக்கப்படுகின்றனர். முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகன் ராமா ராவுக்கு மத நம்பிக்கை கிடையாது. முஸ்லிம்களின் ஓட்டுக்காக இதெல்லாம் செய்கிறார்கள்.

மீண்டும் கைது
நான் எந்த மதத்தையும் தவறாக பேசவில்லை. தனி நபர் குறித்தே விமர்சித்தேன். நீதிமன்றம் ஊடகங்களை சந்திக்கக்கூடாது என்றது. வேறு வழியில்லாமல் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்." என்றார். இந்த நிலையில் நீதிமன்றம் விடுவிடுத்த அடுத்த சில மணி நேரங்களிலேயே தற்போது வெளியிட்ட வீடியோவுக்காக ஐதராபாத் காவல்துறை அவரை கைது செய்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications