"காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பிரஷர் தாங்க முடியலை! சாரி அம்மா".. 16 வயது சிறுவன் தற்கொலை
பள்ளி விடுதியில் படிக்க சொல்லி டார்ச்சர் செய்வதாக கூறி 11 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: தனது ஜூனியர் கல்லூரியில் அதிகம் டார்ச்சர் கொடுப்பதால் என்னால் சமாளிக்க முடியவில்லை என 11 ஆம் வகுப்பு மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர் பகுதியான நரசிங்கி என்ற பகுதியில் ஸ்ரீ சைதன்யா கல்லூரி உள்ளது. இந்த ஜூனியர் கல்லூரியில் விடுதி வசதியும் இருக்கிறது. இதனால் இங்கு நகுலா சாத்விக் என்ற 16 வயது சிறுவன் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த மாணவனுக்கு தினந்தோறும் ஐஐடி பயிற்சி அளிக்கப்பட்டு வந்துள்ளது. மாணவர்கள் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. மேலும் இரவு 10 மணி வரை படிப்பு படிப்பு என மாணவர்கள் வகுப்பறைகளிலேயே அமர வைக்கப்பட்டிருந்தனர்.

படிப்பு நேரம்
படிப்பு நேரம் முடிந்தவுடன் மாணவர்கள் அனைவரும் தங்கள் ஹாஸ்டல் விடுதியிில் உள்ள அறைகளுக்கு சென்றுவிட்டனர். அப்போது சாத்வித் மட்டும் காணவில்லை. இதனால் அவர் விடுதிக்கு வராதது குறித்து ஹாஸ்டல் வார்டனிடம் சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் வார்டன் சாத்விக்கை தீவிரமாக தேடவில்லை. இதனால் நண்பன் சாத்விக்கை விடுதி மாணவர்கள் தேடியுள்ளனர்.

வகுப்பறை
ஒவ்வொரு வகுப்பறையாக தேடிய போது அங்கு தூக்கில் தொங்கியபடி இருந்த சாத்விக்கை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சாத்விக்கை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இரு நாட்கள்
இதையடுத்து அதிகாலை 4 மணிக்கு மற்ற மாணவர்களுக்கு இரு நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இதையடுத்து போலீஸாரிடம் சாத்விக் எழுதிய தற்கொலை கடிதத்தையும் மாணவர்கள் கொடுத்துள்ளனர். அந்த கடிதத்தில் அந்த சிறுவன் கைப்பட்ட எழுதியுள்ளார். அதில் என்னால் இங்கு அழுத்தத்தை தாங்க முடியவில்லை அம்மா. அதனால்தான் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.

மன்னித்துவிடுங்கள்
என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. நான் அனுபவித்த சித்திரவதைகளை யாரும் அனுபவிக்கக் கூடாது. அவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யுங்கள். உங்களை இந்த நிலைக்கு உட்படுத்தியதற்கு மன்னிக்கவும் அம்மா என அந்த கடிதத்தில் மாணவர் எழுதியுள்ளார். இதுகுறித்து நண்பர்களிடம் கேட்ட போது சாத்விக் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். எப்போது தனிமையிலேயே இருந்து வந்தான். அதிக மார்க் எடுக்க வேண்டும் என்பதற்காக சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டான் என கூறினர்.

10 மணி வரை
அது போல் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் அந்த ஜூனியர் கல்லூரியில் சில மாணவர்களை உடலளவில் தாக்குவது, படிப்பதில் பின்னடைவு என்றால் மற்ற மாணவர்கள் முன்பு அவமானப்படுத்துவது போன்ற வீடியோக்களையும் மாணவர்கள் காண்பித்துள்ளனர். உணவு உண்ணும் நேரத்தை தவிர காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை படிப்பு படிப்பு என பிழிந்து எடுத்துள்ளனர்.

15 நிமிடங்கள்
சாத்விக் காணாமல் போய் 15 நிமிடங்கள் வரை நிர்வாகம் தேடவே இல்லை. ஒரு வேளை உடனே நடவடிக்கை எடுத்திருந்தால் சாத்விக் பிழைத்திருப்பான் என்கிறார்கள் நண்பர்கள். இதுகுறித்து சாத்விக்கின் தந்தை நகுல ராஜா பிரசாத் கூறுகையில் தோல் அலர்ஜிக்கு மருந்து வேண்டும் என சாத்விக் கேட்டான். நானும் வாங்கிக் கொண்டு போய் கொடுத்தேன். அப்போது ஆசிரியர்களின் அழுத்தம் குறித்து என் மகன் என்னிடம் கூறினான். நானும் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என கூறியிருந்தேன். தேர்வுகள் நெருங்குவதால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும்படியும் தேவைப்பட்டால் அடுத்த ஆண்டு வேறு பள்ளியில் சேர்த்துவிடுவதாகவும் கூறியிருந்தேன். இவ்வாறு கூறிவிட்டு வீடு திரும்பினேன். வீட்டுக்கு சென்ற இரண்டு மணி நேரத்தில் இது போல் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து சாத்விக் தற்கொலை குறித்து போன் வந்தது என கண்ணீர் மல்க தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications