பிரச்சார களத்திற்கு வருகிறார் சோனியா காந்தி.. தெலுங்கானாவில் அனல் பறக்கும் தேர்தல்
ஹைதராபாத்: தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், சோனியா காந்தி தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.
சோனியா காந்தியின் பிரச்சாரம் கடந்த தேர்தலில் எடுபடவில்லை என்ற போதிலும் இம்முறை அவரது பிரச்சாரத்தை பெரிதாக நம்பியுள்ளது அம்மாநில காங்கிரஸ் கட்சி.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தெலுங்கானாவில் மூன்று இடங்களில் சோனியா காந்தி பிரச்சாரம் செய்தார். இம்முறை ஒரு இடத்தில் மட்டும் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
ஹெலிகாப்டர்
தெலுங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஆர்.சி.குந்தியா இதுபற்றி கூறுகையில், வாரங்கல் நகரத்தில் சோனியா காந்தியின் பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால், குறிப்பாக ஹெலிகாப்டர் பயணம் தொடர்பான சில சிக்கல்கள் காரணமாக நவம்பர் 23ஆம் தேதி மெட்கல் பகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று கூறினார்.
சோனியா காந்தி
இந்தப் பகுதி தலைநகர் ஹைதராபாத் அருகே உள்ள கிரேட்டர் ஹைதராபாத் பகுதியில் அமைந்துள்ளது. அதேநேரம் சோனியா காந்தியின் இந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இணைந்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
சோனியா காந்தி பங்களிப்பு
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக உதயமானதில், சோனியா காந்தியின் பங்களிப்பு இருப்பதால் அவர் மீது தெலுங்கானா மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாக அக்கட்சி கருதுகிறது. ஆனால் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தெலுங்கானா மாநிலம் உதயமானதன் முழு பலனையும் சந்திரசேகரராவ் பெற்றார்.
மெத்தனம்
சந்திரசேகரர்ராவ் வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் மாநில அளவிலான நிர்வாகிகளின் மெத்தனம்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே இம்முறை தெலுங்கானா மக்களின் அன்பை சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு திருப்ப, அவரது பிரச்சாரம் பயன்படும் என்று அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். டிசம்பர் 7ம் தேதி தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலும், சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.