தெலுங்கானாவில் ட்விஸ்ட்! ஆட்சியை இழக்கும் கேசிஆர்! காங்கிரசுக்கு மெகா வெற்றி! பாஜக எங்கே? புது சர்வே
ஹைதராபாத்: தெலுங்கானாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சியை அமைக்க வாய்ப்புள்ளதாகப் புதிதாக வெளியான சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.
நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவில் இப்போது கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானா உருவானது முதல் கடந்த 9 ஆண்டுகளாக பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருக்கிறது.

கடந்த 2018இல் நடந்த தேர்தலில் தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி 120இல் 88 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 19 இடங்களிலும் மஜ்லீஸ் கட்சி 7 இடங்களிலும் வென்றது. இதற்கிடையே தெலுங்கானா மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல் குறித்து சர்வே ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் வெல்லும்: ஜன்மத் என்ற அமைப்பு நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. தெலுங்கானா சட்டசபைத் தேர்தலுக்குக் காங்கிரஸ் உற்சாகமாகத் தயாராகி வரும் நிலையில், அவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் இந்த சர்வே வந்துள்ளது. மொத்தம் 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா சட்டசபையில் பெரும்பான்மைக்குத் தேவையான மேஜிக் எண் 60. இதற்கிடையே ஜன்மத் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பின்படி இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 59-61 இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு 39 முதல் 41 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இதேபோல் இருந்தால் பிஆர்எஸ் கட்சி முதல்முறையாகத் தெலுங்கானாவில் ஆட்சியை இழக்கப் போகிறது.
என்ன காரணம்: தெலுங்கானா மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி தலைமையில் அங்கே தேர்தல் பிரசாரத்தைக் காங்கிரஸ் ஏற்கனவே தொடங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்திற்கு மிகப் பெரிய ஆதரவும் கிடைத்து வருகிறது. குறிப்பாகக் கடந்த வாரம் சோனியா காந்தி, ராகுல் காந்தி முன்னிலையில் அங்கே பெரிய மாநாடு நடைபெற்றது. அதில் காங்கிரஸ் அறிவித்த 6 வாக்குறுதிகள் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜன்மத் அமைப்பு நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 59-61 இடங்கள் கிடைக்கும். ஆட்சியில் இருக்கும் பிஆர்எஸ் 39-41 சீட்கள் கிடைக்கும். பாஜகவுக்கு 10-11 இடங்களும் மஜ்லீஸ் கட்சிக்கு 5-6 இடங்களும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் மற்ற கட்சிகளும் சுயேச்சைகளும் 4-6 இடங்களில் வெற்றி பெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வாக்கு வங்கி எவ்வளவு: வாக்கு வங்கி அடிப்படையில் பார்த்தால் காங்கிரஸ் கட்சிக்கு 42% சதவிகிதம் வாக்குகள் கிடைக்கும். அதேபோல பிஆர்எஸ் கட்சிக்கு 34% வாக்குள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பாஜகவுக்கு 9% வாக்குகளும் மஜ்லீஸ் கட்சிக்கு 10% வாக்குகளும் கிடைக்கும். மற்ற கட்சிகளுக்கு 5% மட்டுமே வாக்குகள் கிடைக்கும் என ஜன்மத் அமைப்பு நடத்திய இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
6 வாக்குறுதிகள்: காங்கிரஸ் கடந்த வாரம் நடந்த பேரணியில் 6 உத்தரவாதங்களை அறிவித்தது. முதல் திட்டம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்பதாகும். மேலும், அனைத்து பெண்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயணம், சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500 ஆகிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. மேலும், வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம் ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
மேலும், விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும், மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வித்யா பரோசா கார்டுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த 6 வாக்குறுதிகள் தான் இந்தத் தேர்தலில் கேம் சேஞ்சராக இருக்கும் என்று காங்கிரஸ் நம்புகிறது.












Click it and Unblock the Notifications