"இந்தியா" வுக்கு பிறகு.. இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது காங்கிரஸின் முதல் காரிய கமிட்டி கூட்டம்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஹைதராபாத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது.
காரிய கமிட்டி உறுப்பினர்கள் நியமனம், மறுசீரமைப்புக்கு பிறகு முதல்முறையாக இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மூத்த முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி , காரிய கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், செப்டம்பர் 16ஆம் தேதி முதல் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆக்கப்பூர்வமாக தயாராவது குறித்து ஆலோசிக்கப்படும்.
இந்த கூட்டத்திற்கு 90 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 84 பேர் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தை மல்லிகார்ஜுன கார்கே தலைமையேற்று நடத்துகிறார். இதில் சோனியா, ராகுல் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 4 மாநில முதல்வர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
அது போல் மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் முடிவடைகிறது. இதனால் இந்த 5 மாநிலங்களுக்கும் வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறும். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி உருவான பிறகு முதல்முறையாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தெலுங்கானாவில் நடைபெறும் சட்டசபை தேர்தல் பாஜவுக்கும் இந்தியா கூட்டணிக்கும் அக்னிபரீட்சையாக விளங்கும்.












Click it and Unblock the Notifications