முஸ்லீம்களுக்கு மட்டும்தான் நிறைய குழந்தைகள் இருக்காங்களா? மோடி வீட்டில் எத்தனை பேர் தெரியுமா? ஓவைசி
ஐதராபாத்: நாங்கள் என்ன ஊடுருவல்காரர்களா.. அதிக குழந்தைகளுடன் உள்ளவர்களா? வாஜ்பாய், மோடிக்கு உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? என்று ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. 2 வது கட்ட நாடாளுமன்ற தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. எதிர்வரும் தேர்தலை கருத்தில் கொண்டு நாடு முழுக்க தேசிய கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி பேசியது கடும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. பிரதமர் மோடி பேசும் போது, 'அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.
மோடிக்கு கண்டனம்: நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா... மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச்செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூடவிட்டுவைக்காது" என பேசியிருந்தார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவிவித்து வருகின்றன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர், மு.க ஸ்டாலின், என அரசியல் தலைவர்கள் பிரதமரின் கருத்துக்கு கடுமையாக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் மத ரீதியாக பேசி தேர்தல் விதிகளை மீறியதாக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஓவைசி விமர்சனம்: இந்தியா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றிவிடும் என்பதை உணர்ந்ததால், பிரதமர் மோடி விரக்தியில் உள்ளார். இந்திய வரலாற்றில், எந்தவொரு பிரதமரும் நரேந்திர மோடியைப் போல் இவ்வளவு தரம் தாழ்ந்து கண்ணியம் குறைவாக பேசியது இல்லை என்று காங்கிரஸ் தலைவர் கார்கே சாடினார். இவ்வாறு மோடியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், ஐதராபாத் எம்பியும், ஏஐஎம்ஐ கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசியும் விமர்சித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத்: இது தொடர்பாக ஏஐஎம்ஐ கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:- நாங்கள் என்ன ஊடுருவல்காரர்களா.. அதிக குழந்தைகளுடன் உள்ளவர்களா? வாஜ்பாய்க்கு உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்று உங்களுக்கு தெரியுமா? யோகி ஆதித்யநாத்துடன் உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கை 7 பேர் ஆகும்.
மோடி உடன் பிறந்தவர்கள்: அமித்ஷாவுடன் உடன் பிறந்தவர்கள் 7 பேர், மோடி மற்றும் அவருடன் உடன் பிறந்தவர்கள் 6 பேர். தாஜ்மகால், குதுப் மினார், செங்கோட்டை, ஜமா மஸ்ஜித் ஆகியவற்றை தேசத்திற்கு கொடுத்தவர்கள் நாங்கள். தேசத்தை நாங்கள் அலங்காரப்படுதினோம். நாங்கள் ஊடுருவல் காரர்கள் இல்லை. இந்த தேசத்தை சேர்ந்தவர்கள். இந்த நாடு எங்களுடையது. இந்த தேசம் நம்முடையது, நம்முடையதாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications