தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மாஜி நக்சல் சீதாக்கா சொத்து எவ்வளவு? எத்தனை கிரிமினல் கேஸ்?
ஹைதராபாத்: தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியும் அவருடன் 11 அமைச்சர்களும் நேற்று பதவியேற்றனர். ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் மாஜி நக்சலைட் சீதாக்காவும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் 69 இடங்களில் வென்று பிஆர்எஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா முதல்வர் வேட்பாளராக ரேவந்த் ரெட்டி ஏற்கனவே முன்னிறுத்தப்பட்டிருந்தார். இருந்த போதும் தெலுங்கானா முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் தலைவர்களிடையே போட்டி இருந்தது. ஒருவழியாக ரேவந்த் ரெட்டி முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

ஹைதராபாத் எல்.பி. ஸ்டேடியத்தில் நேற்று பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ஒன்று திரள ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா முதல்வராக பதவியேற்றார். அவருக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்பு செய்து வைத்தார். ரேவந்த் ரெட்டியுடன் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் மாஜி நக்சலைட்டான சீதாக்காவும் அமைச்சரானார். அவருக்கு பழங்குடிகள் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
11 கோடீஸ்வர அமைச்சர்கள்: தெலுங்கானாவில் அமைச்சராக பதவியேற்றவர்களில் மிக குறைவான சொத்து வைத்திருப்பவர் அமைச்சர் சீதாக்காதான். அவருக்கு ரூ82 லட்சம் மதிப்பிலான சொத்துகள் மட்டும் உள்ளன. அமைச்சர் ஶ்ரீனிவாச ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ433 கோடி. இவர்தான் தெலுங்கானா அமைச்சர்களில் அதிக சொத்துகளை வைத்திருப்பவர். முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு ரூ 30,04,98,852 கோடி; துணை முதல்வர் பாட்டி விக்ரமார்காவுக்கு ரூ8,13,26,605 கோடி சொத்துகள். அமைச்சர் ஶ்ரீனிவாச ரெட்டியின் மொத்த சொத்து மதிப்பு ரூ4,33,93,34,880 கோடி. ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் சீதாக்காவை தவிர அனைவருமே கோடீஸ்வரர்கள்தான்.
89 கேஸ்கள்: முதல்வர் ரேவந்த் ரெட்டி மீது மொத்தம் 89 கிரிமினல் கேஸ்கள் நிலுவையில் உள்ளன. இதில் ஐபிசி 506-ன் கீழ் 34 வழக்குகளும் ஐபிசி 504-ன் கீழ் 38 வழக்குகளும் பதிவாகி உள்ளன. ஐபிசி 153-ன் கீழ் 21 வழக்குகள் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications