போதை பொருள் வழக்கு.. ராணா, ரகுல் பிரீத்தி உள்ளிட்ட 12 டோலிவுட் பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்
ஹைதராபாத்: போதை பொருள் மற்றும் கருப்பு பணத்தை வெள்ளையாக்கியது தொடர்பான வழக்கு விசாரணையில் 12 தெலுங்கு சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. பாகுபலி நடிகர் ராணா, நடிகை ரகுல் பிரீத்தி சிங் உள்ளிட்ட 12 பிரபலங்களுக்கு எதிராக இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2017ல் தெலுங்கானா கலால் மற்றும் மதுவிலக்கு துறை மாநிலம் முழுக்க பல்வேறு இடங்களில் நடத்திய ரெய்டில் 30 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தது. இந்த சோதனை முடிவில் மொத்தம் 12 வழக்குகள் பதியப்பட்டது.
அதன்பின் 11 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தெலுங்கானா கலால் மற்றும் மதுவிலக்கு துறை மூலம் மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அருகே ரூ.7 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பிடிபட்டது
விசாரணை
அதோடு 62 பேர் விசாரணை செய்யப்பட்டனர். இதில் 11 பேர் வரை தெலுங்கு சினிமா துறைக்கு நெருக்கமானவர்கள். பலர் பிரபல நடிகர்களுக்கு நெருக்கமானவர்கள். இதனால் இதில் நடிகர், நடிகைகளுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கேள்வி எழுந்தது.
அமலாக்கத்துறை
இதில் பல கோடி பணம் கைமாறி இருக்கலாம் என்பதால் அமலாக்குத்துறை இதில் தனியாக விசாரணை தொடங்கியது. இதில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதாக சந்தேகித்த அமலாக்கத்துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் முன்பே இந்த போதைப்பொருள் வழக்கில் சினிமா துறையினர் மீது சந்தேகம் எழுந்ததால் பல்வேறு பிரபலங்களுக்கு தற்போது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
சம்மன்
அதன்படி ரகுல் பிரீத்தி சிங், ராணா, ரவி, தேஜா இயக்குனர் புரி ஜெகநாத், நடிகை சார்மி, முமைத் கான் உள்ளிட்ட பலருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரகுல் பிரீத்தி சிங் இதில் செப்டம்பர் 6ம் தேதியும் , ராணா செப்டம்பர் 8ம் தேதியும், ரவி தேஜா செப்டம்பர் 9ம் தேதியும் இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் இவர்கள் எல்லோரும் சாட்சியங்களாக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேரடி குற்றச்சாட்டு
இதில் தெலுங்கு நடிகர், நடிகைகள் யாருக்கும் எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதோடு இதில் நடிகர்கள், நடிகைகளுக்கு எதிராக ஆதாரங்கள் ஏதாவது கிடைத்ததா என்று அமலாக்கத்துறை எந்த விவரமும் வெளியிடவில்லை. போதை பொருள் வழக்கை விசாரித்து வரும் தெலுங்கானா சிறப்பு படையும் இது தொடர்பாக எந்த தெலுங்கு நடிகர், நடிகைகள் மீதும் நேரடி குற்றச்சாட்டு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.