நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் ED விசாரணை.. சூதாட்ட செயலி வழக்கு குறித்த கிடுக்கிப்பிடி கேள்வி
ஹைதராபாத்: சட்டவிரோத சூதாட்ட செயலியை பிரபலப்படுத்தியதாக கூறப்படும் புகாரில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நடிகை நிதி அகர்வால் உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜரானார். அமலாக்கத்துறையினர் கேள்விகளுக்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா என்ன நடந்தது? என்பது பற்றி விளக்கமளித்துள்ளார்.
நம் நாட்டில் சூதாட்ட செயலியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். சூதாட்ட செயலியால் பணத்தை இழந்து பலர் சிக்கலில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தான், சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நடிகை நிதி அகர்வால், பிரணிதா சுபாஷ், மஞ்சு லட்சுமி உள்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டவிரோத சூதாட்ட செயலிகளை ப்ரோமோஷன் செய்வதற்காக அந்த நிறுவனங்கள் பிரபலங்களை பயன்படுத்தியதும், அவர்களுக்கு பெருமளவு தொகையை வழங்கியதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதும் தெரியவந்தது.இதுதொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வழக்கு தொடர்பாக அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை அமலாக்கத்துறையினர் கேட்டுள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகு வெளியே வந்த விஜய் தேவரகொண்டாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்.
அப்போது விஜய் தேவரகொண்டா,‛‛ கேமிங் செயலிகளுக்கு ஒப்புதல் அளித்தது தொடர்பான தகவல்களை விளக்கமாக வழங்க மட்டுமே சம்மன் அனுப்பி இருந்தனர். இதுதான் உங்களின் செய்திகளுக்கு தலைப்பாக இருக்க வேண்டும். தற்போது சூதாட்ட செயலிகள் பற்றிய விசாரணை நடந்துவ ருகிறது. ஆனால் என்னிடம் விளக்கம் மட்டுமே கேட்கப்பட்டது.
இந்த வழக்கில் என் பெயர் எப்படி வந்தது என்று அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கூட தெரியவில்லை. நான் சில கேமிங் செயலிகளை ஆதரித்தேன். அவை அனைத்தும் சட்டப்பூர்வமானவை. அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த தளங்கள் அனைத்தும் உரிமம் பெற்றது. ஜிஎஸ்டி, டிடிஎஸ் செலுத்துகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக கேமிங் நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டவை.
கேமிங் செயலிகளுக்கும், சூதாட்ட செயலிகளுக்கும் வித்தியாசம் உள்ளது. இவை இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் விவகாரம் தொடர்பான தேவையான அனைத்து ஆவணங்களையம் தெளிவுப்படுத்தி உள்ளேன். உச்ச நீதிமன்றமும் மாநில அரசும் எது சரி? எது தவறு? என்பதை முடிவு செய்யும்'' என்றார்.
முன்னதாக நடிகர் பிரகாஷ் ராஜ்யிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. கடந்த மாதம் 30ம் தேதி அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அப்போதும் அவர் தனக்கும், சூதாட்ட செயலிகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பை மறுத்தார். அதேபோல் இந்த வழக்கில் தொடர்புடைய ராணா டகுபதி மற்றும் நடிகை மஞ்சு லட்சுமி ஆகியோர் ஆகஸ்ட் 13ம் தேதி விசாரைணக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications