தெலுங்கானா: கேசிஆருக்கு செம்ம ஷாக்! விவசாயிகளுக்கு நிதி அனுமதியை திடீரென ரத்து செய்த தேர்தல் ஆணையம்!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்துக்கு தந்த அனுமதியை இந்திய தேர்தல் ஆணையம் திடீரென ரத்து செய்திருப்பது ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் பெரும்பான்மைக்கு தேவை 60 இடங்கள். தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி 3-வது முறையாக ஆட்சி அமைக்க முடியும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது. ஆனால் காங்கிரஸோ, பிஆர்எஸ் ஆட்சியை பறித்து புதிய ஆட்சி அமைக்க முடியும் என நம்புகிறது. என்னதான் தேர்தல் கருத்து கணிப்புகள் சிங்கிள் டிஜிட் இடம்தான் கிடைக்கும் என சொன்னாலும் பாஜகவும் மலைபோல நம்பிக்கையுடன் தீவிர பிரசாரம் செய்து வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் இறுதி கட்ட பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு ரூ10,000 நிதி உதவி வழங்கும் ரைத்துபந்து திட்டம் அமலில் இருந்து வருகிறது. இந்த நிதி உதவி ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படும். அத்துடன் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ5 ஆயிரம் வங்கி கணக்குகளில் வரவும் வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 60 லட்சம் விவசாயிகள் பயனடைகின்றனர். இது தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு மிகப் பெரும் நம்பிக்கையான திட்டம். இத்திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ18,000 கோடி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது.

தெலுங்கானாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் விவசாயிகளுக்கான ரைத்துபந்து திட்டத்தின் கீழான நிதியை வழங்க முடியவில்லை. இதற்கான அனுமதியை தேர்தல் ஆணையத்திடம் முதல்வர் சந்திரசேகர ராவ் கோரியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்த போதும் திடீரென தேர்தல் ஆணையம், விவசாயிகளுக்கான நிதியை விடுவிக்க ஒப்புதல் தந்திருந்தது. தேர்தல் நடைபெறும் நிலையில் விசாயிகளுக்கு நிதி கிடைப்பது என்பது ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு பெரும் சாதகமான ஒன்றாக பார்க்கப்பட்டது. இந்த நிதி இன்று விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று திடீரென தேர்தல் ஆணையம், விவசாயிகளுக்கு தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் அரசு நிதி உதவி வழங்க தந்த அனுமதியை ரத்து செய்துவிட்டது. இது முதல்வர் கே.சந்திரசேகரராவுக்கு பெரும் பின்னடைவாகவும் அதிர்ச்சி தரக் கூடியதாகவும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications