திருப்பதியில் தேவஸ்தான பேருந்தை ஆட்டையை போட்ட ஆசாமி.. சார்ஜ் தீர்ந்ததும் நிறுத்தி விட்டு ஓட்டம்
ஐதராபாத்: உச்ச கட்ட பாதுகாப்பு நிறைந்த திருப்பதியில் பக்தர்களுக்காக இயக்கப்படும் மின்சார பேருந்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். விடுமுறை நாட்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மின்சார பேருந்துகள் தேவஸ்தானம் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. தேவஸ்தான நிர்வாகம் சார்பில் 10 மின்சார பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதேபோல் டீசலில் இயங்கும் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருப்பதியில் நேற்று இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு மின்சார பேருந்தை இன்று அதிகாலை காணவில்லை. இதனால் பதறிப்போன அதிகாரிகள் காலை முதலே பேருந்து எங்கு உள்ளது என்று தேடி வந்தனர். பேருந்தில் பொருத்தப்பட்டு இருந்த ஜிபிஎஸ் மூலம் தேடி வந்தனர். இதில் நாயுடுப்பேட்டை அருகே பேருந்து சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
திருப்பதியில் நிறுத்தப்பட்டு இருந்த பேருந்தை மர்ம நபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் எடுத்து ஓட்டிச்சென்றதும் பேருந்தில் சார்ஜ் தீர்ந்ததும் சாலையோரம் அப்படியே நிறுத்தி விட்டு தப்பி ஓடியதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உச்ச கட்ட பாதுகாப்பு நிறைந்த திருப்பதியில் இருந்து தேவஸ்தான நிர்வாகத்திற்கு சொந்தமான பேருந்தையே மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்றது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தை திருடிச்சென்ற நபர் யார்? அவர் எதற்காக திருடிச்சென்றார்.. என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள டோல்கேட்டுகளிலும் உள்ள கேமராக்கள் மூலம் பேருந்தை ஓட்டிசென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். பேருந்தை திருடிய நபர் கைது செய்யப்பட்டால்தான் அவர் எதற்காக திருடிச்சென்றார் உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications