ஆந்திரா முன்னாள் முதல்வர் என்.டி..ராமாராவ் மகள் உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை!
ஹைதராபாத்: ஆந்திரா மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமராவ்-ன் 4-வது மகள் உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில் உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தென்னிந்திய திரை உலகில் எம்ஜிஆர், என்டிஆர் சமகாலத்தவர்களாக இருந்தனர். எம்ஜிஆர் நீண்டகால அரசியலில் இருந்து 1972-ம் ஆண்டு தனிக் கட்சி தொடங்கினார். அதே பாணியில் திரை உலகில் இருந்து 1982-ம் ஆண்டு தெலுங்குதேசம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கி முதல்வரானவர் என்.டி.ராமாராவ்.
1989, 1990களில் தேசிய அரசியலில் காங்கிரஸுக்கு மாற்று அரசியல் முன்வைக்கப்பட்ட போதும் தேசிய முன்னணி உருவானபோதும் காங்கிரஸ் அல்லாத அரசுகள் மத்தியில் ஆட்சி செய்யவும் உறுதுணையாக இருந்தவர் என்.டி.ராமாராவ். தமிழக அரசியல் தலைவர்களுடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருந்தவர். 1996-ம் ஆண்டு தமது 72வயதில் என்.டி.ராமாராவ் காலமானார். என்.டி.ராமராவ் மகன்கள், மகள்கள், பேரன் என அவரது குடும்பம் திரை உலகிலும் அரசியலிலும் இன்றளவும் செல்வாக்கு செலுத்தி வருகிறது.
இந்நிலையில் என்.டி.ராமாராவின் 4-வது மகள் உமா மகேஸ்வரி, ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பங்களாவில் இன்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உமா மகேஸ்வரி கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.