Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் தலைவரையே தோற்கடித்து.. காங்கிரஸ் முதல்வராக உயர்ந்த ரேவந்த் ரெட்டி! யார் இவர்? முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானாவின் புதிய முதலமைச்சராக அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்க உள்ளார். காங்கிரஸின் துடிப்பான தலைவர்களின் பட்டியிலில் முதல் இடத்தில் இருக்கும் ரேவந்த குறித்த தகவல்கள் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக தெலுங்கானா, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில தேர்தல் முடிவுகள் கருதப்பட்டன. இந்த 5 மாநிலங்களில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ்தான் ஆட்சி பொறுப்பில் இருந்தது. ஆனால் தேர்தல் முடிவில் 5 மாநிலங்களில் தெலுங்கானாவில் மட்டுமே காங்கிரஸால் ஆட்சியை கைப்பற்ற முடிந்தது.

Full details about Revanth Reddy who will take over as Chief Minister of Telangana today

கர்நாடகாவை தொடர்ந்து தென்னிந்தியாவின் மற்றொரு மாநிலமான தெலங்கானாவிலும் காங்கிரஸ் காலூன்றியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதற்கு காரணம் அம்மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்த ரேவந்த் ரெட்டிதான். இவர் தற்போது காங்கிரஸ்காரராக இருந்தாலும் தொடக்கத்தில் இந்துத்துவவாதியாக இருந்திருக்கிறார். ஒன்றுபட்ட ஆந்திராவின் சிறந்த கல்வி நிலையங்களில் ஒன்றான உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் கல்வியை தாண்டி அரசியலையும் மாணவர்கள் பயின்றார்கள். இதில்தான் ரேவந்த் ரெட்டியும் அரசியல் பயின்றிருக்கிறார்.

ஆனால் அவர் பழகியது இந்துத்துவா அரசியல். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பில் இணைந்து ரேவந்த் நிர்வாகியாக பணியாற்றியிருக்கிறார். இந்த அனுபவம், பல்கலையில் பட்டம் பெற்று வெளியே வந்து, ஊராட்சி மன்ற தலைவராக உருவாக அவருக்கு உதவியது. கடந்த 2006ம் ஆண்டு மிட்டஜல் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வானார்.

அடுத்த ஆண்டே மகபூப்நகர் மாவட்டத்திலிருந்து சுயேட்சை மேலவை உறுப்பினராக தேர்வானார். சட்டமன்ற நுழைவு, ஏராளமான கட்சிகளுடன் அவருக்கான நெருக்கத்தை அதிகரித்தது.

அதன் பின்னர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் 2009ம் ஆண்டு கோடங்கல் சட்டப்பேரவை தொகுதியில், ரேவந்த் ரெட்டியை வேட்பாளராக போட்டியிட வைத்தார் சந்திரபாபு நாயுடு. அப்போது ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் வேட்பாளர் குருநாத் ரெட்டியை தோற்கடித்து முதன்முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானார்.

5 முறை எம்.எல்.ஏவான காங்கிரஸ் கட்சியின் குருநாத் ரெட்டியை, ரேவந்த் ரெட்டி வீழ்த்தியது பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது குருநாத் ரெட்டி காங்கிரஸின் மிக முக்கியமான 'கை'! இவ்வளவு பெரிய தலைக்கட்டை தோற்கடித்தது ரேவந்த் ரெட்டியின் மைலேஜை மேலும் அதிகரித்தது.

தொகுதி பற்றி தெரியாமலே வென்றவர்: "கோடங்கல் தொகுதி எல்லை எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்றே தெரியாமல் தான் பிரச்சாரங்களை மேற்கொண்டேன். முதல்முறையாக அப்போதுதான் கோடங்கல் சட்டசபை தொகுதிக்கு சென்றேன். 14 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்து 7,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்." என இந்த வெற்றி குறித்துப் பேசியுள்ளார் ரேவந்த் ரெட்டி.

அதன்பின்னர், 2014-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்றார். 2014-ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திர மாநிலம் பிரிந்த நிலையில், தெலுங்கானா மாநில தெலுங்கு தேச கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார் ரேவந்த் ரெட்டி.

தொடர் வெற்றிக்கு எப்போதுமே ஒரு ஸ்பீட் பிரேக்கர் இருக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. அதுபோலத்தான் 2015ல் அந்த சம்பவம் நடந்தது. அதாவது, தெலங்கானா சட்டப்பேரவை மேல்சபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க நியமன எம்எல்ஏ எல்விஸ் ஸ்டீபன்சனுக்கு ரேவந்த் ரெட்டி லஞ்சம் கொடுத்ததாக ஒரு 'ஸ்டிங்-ஆபரேஷன்' வீடியோ வெளியிடப்பட்டது.

இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து 2015 மே மாத இறுதியில் ரேவந்த் ரெட்டியை ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்தது. அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தெலுங்கானா உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ரேவந்த் ரெட்டி ஜூலை மாதம் விடுவிக்கப்பட்டார்.

தொடர் தோல்வி: பின்னர், 2017-ல் தெலுங்கு தேசம் கட்சியை விட்டு விலகி, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2018-ல் காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில செயல் தலைவரானார். 2018-ல் தெலுங்கானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கோடங்கல் தொகுதியில் நின்று தோல்வியைச் சந்தித்தார்.

2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர், தெலங்கானா மாநிலம், மல்காஜ்கிரி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். தெலுங்கானா மாநிலத்தில், ரேவந்த் ரெட்டிக்கென மக்கள் மத்தியில் ஒரு ஆதரவு அலை உருவானது. இதைத் தொடர்ந்து இவரின் வளர்ச்சியை கண்டு, 2021ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது.

மிகப்பெரிய பொறுப்பு: கோஷ்டி மோதல்களுக்கு பெயர் போன தெலுங்கானா காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் பொறுப்பை ஏற்ற ரேவந்த் ரெட்டி, மூத்த தலைவர்களைச் சமாளித்து, கட்சியை திறம்பட நடத்திச் சென்றார். இதன் மூலம், மேலிடத்தின் நம்பிக்கையைப் பெற்றார். ராகுல் காந்திக்கும் நெருக்கமானார். கேசிஆர் மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக எதிர்க்கும் தலைவராக ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் தொண்டர்களின் அபிமானத்தைப் பெற்றார்.

இதைத்தொடர்ந்து, நடைபெற்று முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சாரதியாக நின்று வழிநடத்தினார். தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில், கோடங்கல் மற்றும் காமாரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார் ரேவந்த் ரெட்டி. கோடங்கல் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையிலும், காமாரெட்டியில் கேசிஆருக்கு டஃப் ஃபைட் கொடுத்த ரேவந்த் ரெட்டி பாஜக வேட்பாளர் கட்டிப்பள்ளி வெங்கட ரமண ரெட்டியிடம் தோல்வியைத் தழுவினார்.

இந்நிலையில், இன்று தெலுங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார். ரேவந்த் ரெட்டி. இவருக்கு கீதா என்கிற மனைவியும் நைமிஷா எனும் மகளும் உள்ளனர். ரேவந்த் ரெட்டியின் மனைவி கீதா, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த ஜெய்பால் ரெட்டியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+