கால் முட்டியில் ஏறி இறங்கிய பஸ்.. அலறி துடித்த பெண்.. ஸ்கூட்டியை நொறுக்கி.. வெளியானது வீடியோ..!
ஸ்கூட்டியில் வந்த பெண் மீது அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது
ஹைதராபாத்: இளம்பெண்ணின் கால்கள் மீது அரசு பஸ் ஏறி இறங்கிய கொடூரம் நடந்துள்ளது.. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
கடந்த திங்கட்கிழமை ஆந்திர மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள அனந்தபுரம் மணிகூண்டு அருகே சிக்னலில் பல வண்டிகள் வரிசையில் காத்திருந்தன..
அந்த நேரத்தில் ஒரு பெண், அவருடைய தங்கையுடன் சிக்னலில் ஸ்கூட்டியில் நின்றிருந்தார்.. ஆனால் கிரீன் சிக்னல் விழுவதற்கு முன்பேயே, டக்கென ஸ்கூட்டியை எடுத்து கிளம்பி விட்டார்..

விபத்து
அந்த நேரம் பார்த்து ஒரு அரசு பேருந்து நகர்ந்து சென்று கொண்டிருந்தது.. திடீரென பஸ் குறுக்கே, டூவீலருடன் இந்த பெண் வந்து மோதினார்.. இதில் 2 பேருமே தடுமாறி அதே பஸ் முன்னாடி விழுந்துவிட்டனர்.. ஒரு பெண் சற்று தொலைவில் விழுந்து காயங்களுடன் உயிர் தப்பினார்..

கால் முட்டிகள்
ஸ்கூட்டி ஓட்டி வந்த பெண்ணோ, பஸ் சக்கரத்தின் கீழே சிக்கி கொண்டார்.. பஸ் கிளம்பிய வேகத்தில், இந்த பெண்ணின் கால் முட்டிகளின் மீது பஸ் ஏறி இறங்கியது.. இதனால் கால்களில் உள்ள எலும்புகள் முறிந்தன.. இதை பார்த்து அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. தகவலறிந்து ஆஸ்பத்திரிக்கே விரைந்து வந்த போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.

சாப்ட்வேர் என்ஜினியர்
விபத்துக்கு ஆளானவர் பெயர் நாகலட்சுமி என்பதும், அயர்லாந்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது.. இவர் அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம்.. அவரை பார்ப்பதற்காக சமீபத்தில்தான் ஆந்திரா வந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

வழக்கு
இந்த விபத்து குறித்து அவர் சொல்லும்போது, அரசு பஸ் சரியாகத்தான் வந்தது, ஆனால் தன்னுடைய கவனக்குறைவால்தான் விபத்து ஏற்பட்டது என்றும், இதுசம்பந்தமான புகார் எதுவும் தர விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.. போலீசாரும் இந்த விபத்து சம்பந்தமாக கேஸ் எதுவும் போடவில்லை.. ஆனால் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications