பாலத்தில் தொங்கிய சிறுமி! போலீஸுக்கு பறந்த கால்! அடுத்து நடந்த பகீர் சம்பவம்! வெலவெலத்து போன ஆந்திரா
ஹைதராபாத்: சினிமா படங்களில் வருவதைப் போலப் பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த சிறுமி கடைசி நேரத்தில் போலீசாருக்கு கால் செய்த சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.
சினிமா படங்களில் பொதுவாக ஹீரோவியின் அல்லது ஹீரோவின் குடும்பத்தினர் யாராவது மிகவும் ஆபத்தான சூழலில் இருப்பார்கள்.. வெடிகுண்டு வெடிக்க சில நிமிடங்கள், கார் பள்ளத்தாக்கில் விழும் சூழல் என ஆபத்தான நிலைமையில் இருப்பார்கள்.

அப்போது அவர்களை ஹீரோ கடைசி நேரத்தில் உள்ளே புகுந்து காப்பாற்றுவார். கிட்டதட்ட அதேபோன்ற ஒரு சம்பவம் தான் ஆந்திராவில் நடந்துள்ளது. இந்த உண்மை நிகழ்வில் சிறுமியைச் சரியாக வந்து காப்பாற்றியது ரியல் வாழ்வு ஹீரோவான போலீசார் தான்.
ஆந்திரா: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு 13 வயது சிறுமியை அவரது தாயாரின் லைவ்-இன் பார்ட்னர் பிரிட்ஜ் ஒன்றின் மேலே இருந்து தள்ளிவிட்டுள்ளார். எப்படியோ அந்த சிறுமி சமாளித்து அந்த பிரிட்ஜில் இருந்த பிளாஸ்டிக் பைப்பை பிடித்துக் கொண்டார். அப்படியே பிடித்துக் கொண்டு அவர் நீண்ட நேரம் தொங்கிக் கொண்டிருந்த நிலையில், ஒரு வழியாகக் கடைசியில் அவர் காப்பாற்றப்பட்டார். சினிமாவையே மிஞ்சும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீர்த்தனா என்ற அந்த சிறுமி தான் தனது தாய் சுஹாசினி மற்றும் சகோதரி ஜெர்சி (1) ஆகியோருடன் அங்குள்ள கோதாவரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்திற்குச் சென்றுள்ளார். 36 வயதான தாய் சுஹாசினிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட போதிலும் அவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வசித்து வருகிறார். இடையில் அவருக்கு சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்படவே அவர்கள் இணைந்து லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளனர்.
என்ன நடந்தது: இதற்கிடையே சுஹாசினிக்கும் சுரேஷுக்கும் இடையில் ஏதோ சண்டை வந்துள்ளது. கோதாவரி பாலத்தில் அவர்களுக்குள் மீண்டும் சண்டை வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், அவர்கள் மூன்று பேரையும் பாலத்தின் மேல் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் சுஹாசினியும் ஒரு வயதுக் குழந்தையான ஜெர்சியும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
நல்வாய்ப்பாக கீர்த்தனா பிரிட்ஜிற்கு அருகில் இருந்த ஒரு பிளாஸ்டிக் பைப்பைப் பிடித்துக் கொண்டாள். அங்கே தொங்கியபடியே அந்த சிறுமி மொபைலை எடுத்து 100க்கு டயல் செய்துள்ளார். உடனடியாக பத்தே நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அங்குள்ள ரவுலபாலம் கௌதமி பாலத்தில் நடந்துள்ளது.
போலீசார்: இது குறித்து போலீசார் கூறுகையில், "சம்பவம் நடந்த அன்று அதிகாலை 3.50 மணியளவில் எங்களுக்கு போன் கால் வந்தது. யாராவது வந்து உதவுங்கள் பிரிட்ஜில் தொங்கிக் கொண்டிருக்கிறேன் என அந்த சிறுமி சொன்னார். உடனடியாக அதிகாலை 4 மணியளவில் நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றோம். அங்கு நாங்கள் பார்த்த காட்சி எங்களுக்கு அதிர்ச்சி தருவதாகவே இருந்தது. அந்த சிறுமி ஆபத்தான நிலையில் பிரிட்ஜில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தோம்" என்றார்.
உடனடியாக செயல்பட்ட ரவுலபாலம் போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் உதவியுடன் இணைந்து சிறுமியை மீட்டனர். இதன் பின்னர் அந்த சிறுமி கூறுகையில், "என் அம்மாவுடன் வசிக்கும் சுரேஷ், எங்களை ராஜமஹேந்திரவரம் அழைத்துச் சென்றார். அப்போது ரவுலபாலம் பாலத்தில், செல்ஃபி எடுப்பதாகக் கூறி, காரை நிறுத்தினார். அப்போது திடீரென எங்கள் மூவரையும் கோதாவரி ஆற்றில் தள்ளிவிட்டுக் கிளம்பிவிட்டார்" என்றார்.
போலீசார் அந்த சிறுமியைக் காப்பாற்ற சுமார் 30 நிமிடங்கள் ஆகியுள்ளன. அதுவரை அந்த சிறுமி பாலத்திலேயே தொங்கிக் கொண்டு இருந்துள்ளார். இது குறித்து சிறுமி அளித்த தகவல் அடிப்படையில் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அடுத்தகட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications