தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை.. நாங்கள் ஆதரிக்கிறோம்.. வலிய வந்து கேசிஆருக்கு கை கொடுக்கும் பாஜக
ஹைதராபாத் : தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை அமைந்தால் சந்திரசேகர ராவ் கட்சிக்கு ஆதரவு தருவதாக பாஜக அறிவித்துள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 11-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
119 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 60 உறுப்பினர்கள் தேவை. இந்தியா டுடே, டைம்ஸ் நவ் உள்ளிட்ட 3 கருத்து கணிப்பில் டிஆர்எஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று கணித்துள்ளது.
இந் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில பா.ஜனதா தலைவர் கே.லட்சுமண் கூறியதாவது : தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்போம்.
காங்கிரஸ், எம்.ஐ.எம். ஆகியவைதான் எங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆகும். அவர்களை ஆட்சி அமைக்க விடமாட்டோம். இதனால் எங்களது ஆதரவு டிஆர்எஸ் கட்சிக்கு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.