பஸ் ஸ்டாண்டில் மாரடைப்பால் சரிந்த இளைஞர்.. சாலையில் கடவுளாக வந்த போலீஸ்காரர்.. சட்டென நடந்த அதிசயம்
ஹைதராபாத்: பஸ் ஸ்டாப்பில் பேருந்துக்காக காத்திருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சாலையில் சுருண்டு விழுந்தார். இதை கண்டு மற்றவர்கள் பதற்றம் அடைந்து கொண்டிருக்கையில், போக்குவரத்து காவலர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை செய்து, மாரடைப்பால் பாதிக்கப்பட்டவரை காப்பாற்றினார். இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்திருக்கிறது.
தெலுங்கானா மாநிலத்தில் கோடைக்காலம் தொடங்கும் முன்பே கடுமையாக வெயில் கொளுத்துகிறது. பொதுவாக தெலுங்கானாவில் வெயில் கோடைக்காலங்களில் மிக அதிகமாக இருக்கும். சர்வசாதாரணமாக 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை இருக்கும். 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை எல்லாம் தெலுங்கானாவில் பதிவாகுவது உண்டு. தெலுங்கானாவில் வெயில் காலங்களில் அதிக அளவு மக்கள் பாதிக்கப்படுவது உண்டு. ஆண்டுதோறும் கடுமையான வெயில் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்படுவது உண்டு.
இந்நிலையில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வெயில் அதிகரித்துள்ளது- வெள்ளிக்கிழமை காலை ஹைதராபாத்தில் உள்ள எல்.பி நகரைச் சேர்ந்த பாலராஜு (32) என்பவர் ஹைதராபாத் ராஜேந்திர நகர் ஆரம்கர் கூட்டு ரோடு பகுதியில் உள்ள ஒரு பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார்.

காப்பாற்றினார்
அப்போது, பாலராஜுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது.. இதனால் அவர் சாலையிலேயே சுருண்டு விழுந்தார். இதனை பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ராஜசேகர் பார்த்துவிட்டார். உடனே ஓடிவந்த காவலர் ராஜசேகர், பாலராஜுவின் மார்பில் கை வைத்து அழுத்தி சிபிஆர் சிகிச்சை அளித்தார். இதில் பால்ராஜ் பிழைத்துக்கொண்டார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

காவலருக்கு பாராட்டு
தற்போது பாலராஜு அபாய கட்டத்திலிருந்து காப்பாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை அறிந்த சைபராபாத் போலீஸ் கமிஷ்னர் ஸ்டீபன் ரவீந்திரா, காவலர் ராஜசேகரை அழைத்து வெகுவாக பாராட்டினார். இதேபோல், தெலங்கானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹரீஷ்ராவும், காவலர் ராஜசேகரின் மனிதாபிமானத்தை வெகுவாக பாராட்டினார். காவலர் ராஜசேகருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

ஹைதராபாத்
முன்னதாக ஹைதராபாத்தில் ஜிம்மில் உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு போலீஸ்காரர் உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள போவன்பள்ளியில் வசிப்பவர் விஷால் வயது 24. இவர் ஆசிப் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் தான் வசிக்கும் பகுதியில் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்.

ஜிம் வீடியோ
அப்படித்தான் வியாழக்கிழமை இரவு 8 மணி அளவில் காவலர் விஷால் உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அப்போது என்ன நடந்தது என்பது குறித்து சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் விஷால் தீவிரமாக புஷ் அப் உள்பட உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். திடீரென அருகில் இருந்த கம்பியை பிடித்து சோர்வாக நிற்கும் விஷால், அப்படியே மெதுவாக சரிந்து கீழே விழுகிறார். அவரை சுற்றி உள்ளவர்கள் ஓடி வந்து பார்க்கிறார்கள்.

உயிரிழப்பு
என்ன நடந்தது என்பதை சுற்றி உள்ளவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போது, அவர் இருமுகிறார். அருகில் இருந்தவர்கள் அவருக்கு உதவி செய்கிறார்கள். அப்போது ஒருவர் அவரை உயிர்பெற வைக்க உடற் பயிற்சியாளரை அழைக்கிறார். அத்துடன் அவர்கள் விஷாலை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

எப்படி வருகிறது
மாரடைப்பு ஏன் வருகிறது? "இதய வால்வுகளில் பிரச்னை, இதயச் செயலிழப்பு உள்ளிட்ட சில காரணங்களால் இந்த திடீர் மாரடைப்பு உண்டாகிறது. இதுதவிர, அதிகமாக உடற்பயிற்சி (வார்ம்அப் எடுத்துக் கொள்ளாமல்) செய்பவர்களுக்கும், திடீரென கடுமையான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் பொழுதுபோக்குக்காக விளையாடும் மாணவர்களுக்குப் படபடப்பு, மூச்சுத்திணறல், மயக்கம், நெஞ்சுவலி போன்ற பாதிப்புகள் இருந்தால் விளையாட்டில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது. அதேபோல, பெற்றோர் அல்லது தங்களது பரம்பரையில் யாருக்காவது சிறுவயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போயிருந்தால் அவர்கள் இந்த விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications