தகாத இடத்தில் பெண்ணைத் தொட்ட நபர்.. பிக்பாஸ் ஸ்டைலில் குறும்படம் போட்டு எச்சரித்த ஹைதராபாத் போலீஸ்
ஹைதராபாத்: கூட்ட நெரிசலில் பெண்ணைத் தகாத இடத்தில் தொட்டவரின் வீடியோவை வெளியிட்டு பிக் பாஸ் ஸ்டைலில் ஹைதராபாத் போலீஸார் எச்சரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் ஹைதராபாத் போலீஸாரின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த சம்பவம் ஓய்வதற்குள் மகாராஷ்டிர மாநிலம், தானேவில் 4 வயது சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அங்கு பெரும் போராட்டமாக வெடித்தது.

பள்ளி, கல்லூரி, வீடு, பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளும் பாதுகாப்பற்ற பகுதிகளாக பெண்களுக்கு மாறி வரும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை ஒவ்வொரு பெண்ணும் நாள்தோறும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹைதராபாத் காவல் துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவில் நெரிசல் மிகுந்த பகுதியில் ஆண் ஒருவர் பெண்ணை தகாத முறையில் தொடும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோ பதிவில் காவல் துறை கூறியுள்ளதாவது: சாலைகள், பொது இடங்கள் என நீங்கள் எந்தவொரு பகுதியில் தவறாக நடந்து கொண்டாலும் எங்களுடைய ஷீ டீம்கள் அதனைப் பதிவு செய்கின்றனர்.
உங்களை சிறையில் அடைக்காமல் பாதுகாப்பதற்கான ஒரே மந்திரம்.. உங்களுடைய தீய மோசமான எண்ணங்களைக் கொல்வது மட்டுமே என்று அதில் தெரிவித்துள்ளனர். தகாத முறையில் நடந்து கொண்ட நபர் மீது போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனரா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஹைதராபாத் போலீஸாரின் இந்த வீடியோ பதிவை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். அதேபோல, அந்த நபர் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதேபோல, தங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து வருகின்றனர். ஹைதராபாத் போலீஸாரின் இந்த செயலைப் பலரும் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதில் ஒரு பயனர், இதுபோன்ற தவறான நடத்தையைப் பதிவு செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், கடுமையான தண்டனைதான் இதற்கு சரியான தீர்வாக இருக்கும். எத்தனை பேரை தண்டிப்பது என்பதுதான் இப்போதுள்ள பிரச்னை என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், குற்றவாளிகளின் படங்களை வெளியிட்டு பொதுவெளியில் அவர்களை அவமானப்படுத்துங்கள். இதுபோன்ற குற்றவாளிகளுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
அருமையான வேலையை செய்துள்ளீர்கள் சார். தயவுசெய்து இதுபோன்ற மோசமான நபர்களை பகிரங்கமாக தண்டிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவத்தை தடுப்பதற்குப் பதிலாக, இதனை வீடியோவாக பதிவு செய்துள்ளதை கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை என்று பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications