பழைய ரணங்கள் மறக்குதே! ஸ்கையின் “வானவேடிக்கை”.. முதுகெலும்பாக கோலி -“மோதலுக்கு” பின் மீண்டும் சரவெடி
ஐதராபாத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 இறுதிப்போட்டியில் வென்று இந்திய அணி கோப்பையை தூக்கிய நிலையில், அதில் இளம் வீரர் சூர்யகுமார் யாதவ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு முன்னாள் கேப்டன் விராட் கோலி உரிய ஒத்துழைப்பு கொடுத்து பார்ட்னர்ஷிப்பை தக்க வைத்ததே காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 186 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா அடுத்தடுத்து ஆட்டமிழக்க விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் சூர்ய குமார் யாதவ்.
”நாயகன் மட்டும் மீண்டு வரவில்லை.. ரசிகர்களையும் மீட்டுள்ளான்” விராட் கோலி ஏன் கொண்டாடப்படுகிறார்?
கோலி - சூர்யா ஜோடி
விராட் கோலி விக்கெட்டுகள் விழுவதை கட்டுப்படுத்தி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் சூர்யகுமார் யாதவை அதிரடி ஆட்டம் ஆடினார். இதற்கு ஃபார்ட்னராகவும் ஒரு சீனியர் வீரராகவும் தேவையான ஒத்துழைப்பை கோலி வழங்கி நம்பிக்கை அளித்தார்.
ஸ்கையின் வானவேடிக்கை
தனக்கு வந்த பந்துக்களை வீணடிக்காமல் சூர்ய குமார் யாதவுக்கு ஸ்ட்ரைக்கை மாற்றிவிட்டுக் கொண்டிருந்தார் விராட் கோலி. இதனால் சூர்யகுமார் யாதவ் 5 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 69 ரன்களை விளாசி அசத்த மறுமுனையில் இருந்த விராட் கோலி சற்று தாமதமாக அரை சதத்தை கடந்தார்.
ஆசிய கோப்பை
சூர்யகுமாரின் இந்த ஆட்டத்துக்கு மறுமுனையில் இருந்த விராட் கோலியே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. நடந்த முடிந்த ஆசிய கோப்பை தொடரிலும் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியிலும் ஜோடி சேர்ந்த விராட் கோலியும் சூர்யகுமார் யாதவும் இதேபோல் பந்துவீச்சை துவம்சம் செய்தது குறிப்பிடத்தக்கது.
பிளாஷ்பேக்
இன்று வெற்றிகரமான ஜோடியாக ஜொலித்த விராட் கோலி - சூர்யகுமார் இடையே கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த மோதலை யாராலும் மறந்திருக்க முடியாது. மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 79 ரன்கள் விளாசினார். அப்போது அவரை நோக்கி முறைத்துக்கொண்டே கோலி செல்ல, சூர்யகுமார் யாதவும் தயக்கமின்றி அவரை நோக்கி கோபமாக முன்னேறினார்.
பரபரப்பான மைதானம்
கோலியும் சூர்யகுமார் யாதவும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டதால் போட்டி நடைபெற்ற அபுதாபி மைதானம் பரபரப்பானது. ஆனால் கோலிக்கு பதிலடியாக 20 ஓவரில் பவுண்டரி அடித்து மும்பை அணியை வெற்றிபெற வைத்த சூர்யகுமார், நெஞ்சில் கை வைத்து தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். கோலி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியில் வாய்ப்பு வழங்காததால் அவர் மீது சூர்யகுமார் யாதவ் கோபத்தில் இருந்ததாக கூறப்பட்டது.
ஒற்றுமை
அப்போது, இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி மைதானத்தில் நடந்துகொண்டது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இன்று அணியில் நிலையான இடத்தை சூர்யகுமார் யாதவ் பிடித்துவிட்டார். கேப்டனாக இருப்பவர் மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாதான். விராட் கோலி சாதாரண வீரராக ஆடி வருகிறார். ஐபிஎல்-இல் ஆயிரம் இருந்தாலும் இந்தியா என்றால் நாங்கள் ஒன்றுதான் என்ற உணர்வோடு பழைய மனக்கசப்புகளை மறந்து இரு வீரர்களும் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை ரசிகர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.