மீண்டும் சிறுத்தை, கரடி நடமாட்டம்.. பக்தர்கள் குழுவாக செல்லுங்கள்.. திருப்பதி தேவஸ்தானம் அட்வைஸ்
ஐதராபாத்: திருப்பதி திருமலையில் சிறுத்தை, கரடி நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பதால் நடந்து செல்லும் பக்தர்கள் தனித் தனியாக செல்லாமல் குழுவாக செல்லுமாறு தேவஸ்தான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆந்திராவில் புகழ்பெற்ற திருப்பதி திருமலை கோவில் உள்ளது. தினமும் இங்கு பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆந்திரா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் குடியிருக்கும் சேஷாசலம் வனப்பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகள், கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி இரவு அலிபிரி மலைப்பாதையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் ஏழுமலையானை தரிசிக்க சென்றனர். அப்போது, சிறுத்தை ஒன்று 3 வயது சிறுவனான கவுஷிக்கை கவ்வி சென்றது. இதை கவனித்த மக்கள் கத்தி கூச்சல் போட்டதும் சிறுவனை விட்டுவிட்டு சிறுத்தை ஓடியது. பின்னர் பலத்த காயம் அடைந்த நிலையில் சிறுவன் காயம் அடைந்தான்.
இதற்கு மறுவாரமே நெல்லூரை சேர்ந்த லக் ஷிதா என்ற 6-வயது சிறுமி, சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். திருப்பதி மலைப்பாதையில் நடந்து செல்பவர்களை வனவிலங்குகள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்ததால் பக்தர்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து, கூண்டுகள் வைத்து சிறுத்தைகளை பிடிக்கும் பணியை மேற்கொண்டது. இதற்கிடையே, திருமலைக்கு மலையேறி செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் திட்டத்தையும் தேவஸ்தானம் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.

தொடர்ந்து அலிபிரி மலைப்பாதையில் 7-வது மைல், லட்சுமி நரசிம்மர் கோயில் பகுதிகளில் 320 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில், அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தைகள் மற்றும் கரடி ஆகியவற்றின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் பக்தர்கள் குழுவாக செல்ல தேவஸ்தான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நரசிம்மர் கோயில் பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் தென்பட்டதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. சிறுத்தைகள் நடமாட்டம் தென்பட்டு இருப்பது தெரியவந்ததால் பக்தர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் பக்தர்களுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.













Click it and Unblock the Notifications