"அரசியல் தற்கொலை.." சந்திரபாபு கிட்டயே போகாதீங்க.. எச்சரிக்கும் தெலங்கானா பாஜக தலைவர்கள்! என்னாச்சு
ஹைதராபாத்: தெலங்கானாவில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் நிலையில், சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் கூட்டணி அமைக்க முயல்கிறார். இருப்பினும், பாஜக உள்ளூர் தலைவர்கள் இந்தக் கூட்டணி வேண்டாம் என எச்சரிக்கிறார்களாம். அதற்கான காரணத்தைப் பார்க்கலாம்
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார். இது ஆந்திரா மற்றும் தேசிய அரசியலில் பேசுபொருளாக மாறிவிட்டது.

இந்தாண்டு இறுதியில் தெலங்கானா தேர்தல், அடுத்தாண்டு மக்களவை மற்றும் ஆந்திரா பிரதேச தேர்தல்கள் நடைபெற உள்ளது. பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைப்பது குறித்து இந்தச் சந்திப்பு இருக்கலாம் எனக் கூறப்பட்டது.
சந்திரபாபு நாயுடு: 2024 லோக்சபா தேர்தல்களுக்கு முன்னதாக சந்திரபாபு நாயுடு மீண்டும் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணிக்குச் செல்லலாம் எனக் கூறப்பட்டு இருந்த நிலையில், அந்த ஊகங்களை இது வலுவாக்குவதாக உள்ளது.. ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கிறது. அதேநேரம் தெலுங்கானாவில் அவர்களுக்கு இப்போது ஒரு இடம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கத் தாமதிப்பதாகக் கூறி கடந்த 2018இல் சந்திரபாபு நாயுடு என்டிஏ கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார். இருப்பினும், 2018 தெலங்கானா தேர்தலில் அவர்களால் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அந்த இரு எம்எல்ஏக்களும் கேசிஆர் கட்சியில் சேர்ந்துவிட்டனர். இதனால் தெலங்கானாவில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை.
தெலங்கானா: இருப்பினும், சமீபத்தில் நடைபெற்ற மாநாட்டில், தெலுங்கானாவிலும் கவனம் செலுத்தப் போவதாக தெலுங்கு தேசம் கட்சி அறிவித்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் தெலங்கானாவில் கம்மத்தில் சந்திரபாபு நாயுடு ஒரு மெகா பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார். அதில் தான் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, தெலங்கானாவில் தனது கடந்தகால பெருமையை மீட்டெடுக்கக் கடுமையாக உழைக்குமாறு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
சந்திரபாபு நாயுடு பல விஷயங்களில் பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளையே கூறி வருகிறார். இருப்பினும், பாஜக தலைவர்கள் சந்திரபாபு நாயுடு உடனான கடந்த கால அனுபவம் காரணமாகச் சற்று தள்ளியே இருக்கிறார்கள். ஏனென்றால் கடந்த 2019இல் பிரதமர் மோடியை அவர் "பயங்கரவாதி" என்றும் கூட கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது 2019இல் சந்திரபாபு நாயுடுவுக்கு பாஜகவின் கதவுகள் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாக அமித் ஷாவும் கூறியிருந்தார்.
ஆனால், இப்போது சூழல்கள் மாறிவிட்டன. கர்நாடகாவில் மோசமான தோல்வியைத் தொடர்ந்து தெற்கில் வலுவான கூட்டணியை அமைக்கும் நடவடிக்கையில் பாஜக இறங்கியுள்ளது. அதேபோல தெலுங்கானாவிலும் கால்தடம் பதிக்க பாஜக முயன்று வருகிறது.
இதற்காக சந்திரபாபு நாயுடுவுடன் இணைவது உள்ளிட்ட பல வழிகள் குறித்தும் அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.. ஏனென்றால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு தெலங்கானாவில் இன்னுமே குறிப்பிட்ட அளவு தொண்டர்கள் உள்ளனர். அதையே இப்போது பாஜக குறிவைத்துள்ளது.
என்ன காரணம்: இது தொடர்பாகத் தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "எங்களுக்கு இன்னுமே தெலங்கானாவில் தொண்டர்கள் உள்ளனர்.. அதைக் கருத்தில் கொண்டே பாஜக கூட்டணிக்கு விரும்புகிறது. இப்போதும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் கம்மம், ரங்காரெட்டி, வாரங்கல் போன்ற மாவட்டங்கள் எங்கள் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்குச் செல்வாக்கு இருக்கிறது. அங்கெல்லாம் 5,6 தொகுதிகளில் பெரிய வாக்கு வங்கி இருக்கிறது" என்றார்.
இருப்பினும், பல உள்ளூர் பாஜக தலைவர்கள் சந்திரபாபு உடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்கிறார்களாம். ஏனென்றால், சந்திரபாபு உடன் கூட்டணி அமைத்தால் அது கே.சி.ஆருக்கு மீண்டும் பிராந்திய உணர்வைத் தூண்டி வாக்கு வங்கியை அதிகரிக்க ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும்.
எச்சரிக்கை: இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "2018ல் சந்திரபாபு நாயுடுவுடன் கைகோர்த்து காங்கிரஸ் செய்த அரசியல் தற்கொலைக்கு நிகராக இதுவும் இருக்கும். தெலுங்கானா மாநிலத்தை எதிர்க்கும் ஒரு கட்சியுடன் கைகோர்த்து, தெலுங்கானா மக்களைக் காங்கிரஸ் எப்படி ஏமாற்றுகிறது என்றே அப்போது கேசிஆர் முழு பிரச்சாரத்தையும் செய்தார். இப்போது அதே மீண்டும் அதே நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அந்த ரிஸ்க் எடுக்க பாஜக விரும்பவில்லை. மத்திய தலைமைக்கு இது எல்லாம் தெரியும்" என்றார்.
தெலங்கானாவுக்கான மாநில அந்தஸ்து கோரி பெரும் போராட்டம் நடந்த போது, ஆந்திராவில் இருந்து குடியேறியவர்களின் உரிமைகள் வாய்ப்புகள் பறிக்கப்படலாம் என என்ற அச்சம் இருந்தது. ஆனால், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதியளித்து, அந்த அச்சத்தை கே.சி.ஆர் போக்கினார்.
அதன்பிறகு, தெலுங்கானா உருவான பிறகும், ஆந்திரா பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் ஏற்படவில்லை. இதனால் இப்போதும் ஆந்திரா பகுதிகளில் இருந்து வந்தவர்கள் சந்திரபாபுவுக்கு வாக்களிப்பார்கள் என உறுதியாகச் சொல்ல முடியாது என்றே பாஜக தரப்பு கூறுகிறது.












Click it and Unblock the Notifications