பயங்கரவாதிகளாகும் மாவோயிஸ்டுகள்? சத்தீஸ்கருக்கு திரும்பும் ஆதிபழங்குடிகள் ஆந்திராவில் படுகொலையா?
ஹைதராபாத்: ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் பிடியில் இருக்கும் சத்தீஸ்கர் ஆதி பழங்குடிகள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப விரும்பினால் படுகொலை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சித்தாந்தம் பேசி ஆயுதம் தூக்கிய மாவோயிஸ்டுகள் மனிதர்களை வேட்டையாடும் பயங்கரவாதிகளாகி வருவதாக மூத்த பத்திரிகையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆந்திரா, ஒடிஷா, மகாராஷ்டிரா, பீகார், ஜார்க்கண்ட்,சத்தீஸ்கர், மேற்கு வங்கம் என பல மாநிலங்களில் பல மாவட்டங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் மாவோயிஸ்டுகள். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்த மாவட்டங்களில் அரசு நிர்வாகங்கள் முழுமையாக முடுக்கிவிடப்பட்டன.

மலைமுகடுகளில் ஒதுங்கி வாழ்ந்த ஆதி பழங்குடிகளை கேடயங்களாக மாவோயிஸ்டுகள் பயன்படுத்தி வந்தனர். இந்த கடந்த காலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு மெல்ல மெல்ல ஆதி பழங்குடிகள் பொதுநீரோட்டத்தில் கலந்து வருகின்றனர். இதனால் மாவோயிஸ்டுகள் பலமும் குறைந்து கொண்டே வருகிறது.
ஒடிஷாவில் மாவோயிஸ்டுகளின் கோட்டையான கோராபுட், மல்காங்கிரி பகுதிகளில் நாட்டின் 76-வது சுதந்திர தினம் எழுச்சியுடன் நேற்று கொண்டாடப்பட்டது. பொதுவாக இப்பகுதிகளில் சுதந்திர தினம், குடியரசு தினத்துக்கு மாவோயிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவிப்பர். ஆனால் இம்முறை அத்தகைய எதிர்ப்புகள் எதுவும் இல்லை.
இந்நிலையில்தான் ஆந்திராவின் மாவோயிஸ்டுகள் பகுதிகளில் ஆதி பழங்குடிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக ஆய்வு செய்த மூத்த பத்திரிகையாளர்கள், சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ஒடிஷா, ஆந்திராவில் மாவோயிஸ்டுகளுடன் இணைவதற்காக பழங்குடிகள் இடம்பெயர்ந்திருந்தனர். இதனால் சொந்த ஊரில் நிலங்களையும் இந்த பழங்குடிகள் பறிகொடுத்தனர்.
மாவோயிஸ்டுகளுடன் நீண்டகாலம் இணைந்து பதுங்கி வாழ முடியாது என்ற நிலையில் சொந்த மாநிலமான சத்தீஸ்கர் திரும்புவதற்கு பழங்குடிகள் முடிவு செய்தனர். ஆனால் இது தங்களது பலவீனத்தை அம்பலமாக்கும் என்பதால் மாவோயிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அப்படி மாவோயிஸ்டுகள் எதிர்ப்பை மீறி தப்பி சத்தீஸ்கருக்கு செல்ல முயற்சித்த பழங்குடிகளை ஈவிரக்கமே இல்லாமல் மாவோயிஸ்டுகள் படுகொலை செய்து வருவது தொடர்ந்து நடைபெறுவதாக அந்த மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். சித்தாந்தம் மூலம் ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் இப்போது பயங்கரவாதிகளாக உருமாறி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications