ஒரு இன்ச் கூட ஆக்கிரமிப்பு இல்லை.. பட்டாவில் உள்ள அரங்கத்தை இடித்துள்ளனர்.. நடிகர் நாகர்ஜுனா
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றியுள்ள நிலையில், இந்த இடம் பட்டாவில் இருக்கிறது. ஒரு இன்ச் கூட ஆக்கிரமிப்பில் இல்லை என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் நாகர்ஜுனா. முன்னணி நடிகரான நாக சைதன்யா இருடைய மகன்தான். ஹைதராபாத்தில் நாகர்ஜுனாவுக்குச் சொந்தமான அரங்கத்தை தேசிய பேரிடர் கண்காணிப்புக் குழு இடித்துள்ளது. நீர் நிலைகளை ஆக்கிரமித்து இந்தக் கட்டடம் இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத், மாதாப்பூரில் உள்ள தம்மி செருவு ஏரியை ஒட்டி நாகர்ஜுனாவுக்குச் சொந்தமான அரங்கம் ஒன்று உள்ளது. இந்த அரங்கம் 10 ஏக்கர் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அரங்கம் அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. மொத்தம் மூன்று திருமண மஹால்கள் இதில் உள்ளன.
இந்த அரங்கத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், குடும்ப விழாக்கள் மற்றும் அரசியல் கட்சி நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. சினிமா பிரபலங்கள, அரசியல் கட்சித் தலைவர்களின் திருமணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடப்பட்டு வந்தது.
சுமார் 3.30 முதல் 3.40 ஏக்கர் ஏரி நிலத்தை நடிகர் நாகர்ஜுனா ஆக்கிரமித்து அரங்கம் கட்டியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்தன. இந்த மண்டபம் பல ஆண்டுகளாக ஏரியில் உள்ளதாக புகார்கள் உள்ளது. ஆக்கிரமிப்பு குறித்து பாஸ்கர் ரெட்டி உள்பட பலர் புகார் அளித்தனர். மேலும் ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதாகவும், பொதுச் சொத்தில் சுமார் 1.2 ஏக்கர் ஆக்கரமித்து இந்த அரங்கத்தை நாகர்ஜுனா அமைத்துள்ளதால் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிக்கப்படடுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புடன், ஜேசிபி இயரங்களுடன் அதிகாரிகள் சென்றனர். மேலும் பாதுகாப்பு கருதி அரங்கத்துக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில், ஆக்கிரமிப்பு ஒரு இன்ச் கூட இல்லை என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, நாகர்ஜுனா கூறியுள்ளதாவது: எனது கட்டடத்தை இடிக்க நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கப்பட்டுள்ள நிலையில் இதனை இடித்துள்ளனர். நாங்கள் சட்டத்தை மீறவில்லை. இந்த இடம் பட்டாவில் உள்ளது. ஒரு இன்ச் நிலம் கூட ஆக்கரமித்து கட்டப்படவில்லை.
தனியாருக்குச் சொந்தமான இந்த இடத்தில் எந்தவித அறிவிப்புமின்றி கட்டடத்தை இடிக்கக் கூடாது என நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கப்பட்டுள்ளது. ஆனால், தவறான தகவலின் அடிப்படையில் அரங்கம் இடிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் அரங்கம் இடிக்கப்படுவது குறித்து எங்களுக்கு எந்த நோட்டீஸும் வழங்கப்படவில்லை. சட்டத்தை மதிக்கும் நபர் நான்.
என் மீது தவறு என நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டால் நானே கட்டடத்தை இடித்துவிடுவேன். அதிகாரிகள் தவறான தகவலால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். என்னுடைய அரங்குக்கு உரிய நிவாரணம் கேட்டு நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications