எமனே நேரில் வந்தது போல.. பூட்டிய வீட்டில் பந்தை எடுக்கப்போன இளைஞர்! உள்ளே கண்ட காட்சி! பகீர் சம்பவம்
ஹைதராபாத்: தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் பல ஆண்டுகளாகப் பூட்டி கிடந்த வீட்டில் பந்து விழுந்துவிட்டதால் அதை எடுக்க இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அங்கு உள்ளே அவர் கண்ட காட்சி ஒரு நொடி அவரையும் ஆட்டம் காண வைத்துவிட்டது. வீட்டுச் சமையலறையில் எலும்பு கூட ஒன்று மிக மோசமான நிலையில் இருந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது.
நமது வீட்டைச் சுற்றிலோ அல்லது நமது ஏரியாவிலேயோ கைவிடப்பட்டக் கட்டிடம் எதாவது இருக்கும். பல காலமாக அந்த வீட்டைப் பூட்டியே வைத்திருப்பார்கள். உள்ளே என்ன இருக்கிறது என்பதும் யாருக்கும் தெரியாது. அந்த வீட்டைப் பற்றிப் பல கதைகளும் சுற்றிக்கொண்டு இருக்கும். அப்படி பெங்களூரில் பூட்டப்பட்ட வீட்டில் கிட்டத்தட்டச் சினிமாவில் வருவது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கைவிடப்பட்டக் கட்டிடம்
ஹைதராபாத்தின் நம்பள்ளி என்ற பகுதியில் ஒரு கட்டிடம் கைவிடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. பல ஆண்டுகளாகவே அது பூட்டப்பட்டு இருந்ததால் யாரும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையே அந்த வீட்டில் இப்போது மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தின் நம்பள்ளி சந்தைக்கு அருகில் உள்ள அந்த வீடு கடந்த ஏழு வருடங்களாகப் பூட்டியே இருந்ததாகக் கூறப்படுகிறது. அருகே கிரிக்கெட் விளையாடும்போது பந்து அந்த வீட்டிற்குள் போய் இருக்கிறது. அந்தப் பந்தை தேடி இளைஞர் ஒருவர் கைவிடப்பட்ட வீட்டிற்குள் சென்றபோது தான் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எலும்புக்கூடு
பால் எடுக்கப் போன இடத்தில் எலும்புக்கூடு இருந்ததைப் பார்த்து அவர் அதிர்ந்து போய்விட்டார். வீட்டில் எலும்புக்கூடு இருந்ததைப் பார்த்து உறைந்த அவர் அதை வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ இப்போது பேஸ்புக்கில் டிரெண்டாகி வருகிறது.. அதில் வீட்டின் சமையலறையில் குப்புறப் படுத்து இருப்பது போல் அந்த எலும்புக்கூடு உள்ளது. அந்த எலும்புக்கூட்டைச் சுற்றிலும் பல பாத்திரங்கள் சிதறிக் கிடக்கின்றன.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் க்ளூஸ் எனப்படும் சிறப்புப் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீட்டை இன்ச் பை இன்ச் சோதனை செய்த அவர்கள் மீதமிருந்த தடயங்களைச் சேகரித்தனர். எலும்புகளைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், சொத்து ஏழு வருடங்களாகக் காலியாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
நோக்கியா செல்போன்
மேலும் இறந்தவரின் அடையாளத்தைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினர். அந்த எலும்புக் கூட்டுடன் நோக்கியா செல்போன் ஒன்று இருந்துள்ளது. அது சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகி இருந்தது. அதை சார்ஜ் செய்து பார்த்த போது 84 கால்கள் வந்துள்ளன.. அதுவும் 2015ம் ஆண்டு அந்த போன் கால்கள் வந்துள்ளன. மேலும், அங்குப் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட சில ரூபாய் நோட்டுகளும் கண்டறியப்பட்டன.
போலீஸ் சொல்வது என்ன
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கிஷண் குமார் ஆங்கில டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், "அந்த வீடு முனீர் கான் என்பவருக்குச் சொந்தமானது.. அவருக்கு 10 பிள்ளைகள் இருந்தனர். உயிரிழந்த இந்த முனீர் கானின் மகன் அமீர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் முனீரின் 3ஆவது அல்லது 4ஆவது குழந்தை என்கிறார்கள். மற்றவர்கள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்ட நிலையில், அமீர் மட்டும் இங்குத் தனியாக வசித்து வந்துள்ளார்.
அந்த நபர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர். திருமணம் ஆகாதவர். மனநிலை சரியில்லாதவர் போல் தெரிகிறது. அவர் இறந்து சில வருடங்கள் இருக்கும். எலும்புகள் கூட நொறுங்கிப் போயிருந்தன. அதேநேரம் அவரை கொலை செய்தது போலத் தெரியவில்லை. அருகே ரத்தக் கறைகள் காணப்படவில்லை. இது ஒரு இயற்கையான மரணமாக இருக்கலாம். மேலும் விவரங்கள் அறிய உறவினர்களிடம் பேச முயன்று வருகிறோம்" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications