பரிதாப நிலையில் பாஜக.. தெலுங்கானா கிரீடம் கேசிஆருக்கே! காங்கிரஸுக்கு ஜஸ்ட் மிஸ் -கருத்துக்கணிப்பு
ஐதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபைத் தேர்தலில் மீண்டும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியே வெற்றிபெறும் என டெமாக்ரசி டைம்ஸ் கருத்துக்கணிப்பு தெரிவித்து உள்ளது.
ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட தென் மாநிலமான தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரிய சமிதி ஆட்சி 2 வது முறையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியுடன் இந்த ஆட்சிகாலம் நிறைவடைய உள்ள நிலையில் கடந்த மாதம் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி வரும் தெலுங்கானாவில் நவம்பர் 30 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, மஜ்லிஸ் கட்சி ஆகியவை தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி கடந்த ஆகஸ்டு மாதமே வேட்பாளர் பட்டியலை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இம்முறை பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுவதாக கூறப்பட்டது. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க ஆளும் பிஆர்எஸ் - காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
சில கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் வெற்றிபெறும் என்றும், சில கருத்துக்கணிப்புகள் பிஆர்எஸ் கட்சி வெற்றிபெறும் என்றும் தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது டெமாக்ரசி டைம்ஸ் நெட்வொர்க் தெலுங்கானாவில் சட்டசபைத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகளை நடத்தி முடிவுகளை அறிவித்து உள்ளது. அதன்படி 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் மீண்டும் ஆளும் பிஆர்எஸ் கட்சியே ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெரும்பான்மைக்கு 60 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் அக்கட்சி 61 தொகுதிகளில் வென்று நூலிழையில் ஆட்சியை தக்க வைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சி 49 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும், ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி 6 தொகுதிகளில் வெற்றி அடையும் எனவும் கூறப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜக வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் எனவும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications