பாகிஸ்தான் மருமகள் சானியா மிர்சாவுக்கு தூதர் பதவியா?... பாஜக எம்.எல்.ஏ கொந்தளிப்பு
ஹைதராபாத்: பாகிஸ்தான் மருமகளான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை அரசு விளம்பரத்தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா ரெட்டி கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திருமணம் செய்து கொண்டார். கடந்த வாரம் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பல்வேறு பிரபலங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்ததோடு, நிதியுதவியையும் அறிவித்தனர்.

இதற்கிடையே, சமூக வலைதளங்களில் பலர் எழுப்பி உள்ள கேள்விக்கு நீண்ட விளக்கம் அளித்த நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிரபலங்கள் என்றாலே சமூக வலைதளங்களில் தீவிரவாதத்தைக் கண்டிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை என்றார். விரக்தியில் இருக்கும் தனிப்பட்ட நபர்கள் சிலர் தங்களின் கோபத்தையும் வெறுப்பையும் காண்பிக்க இடமில்லாமல் எங்களின் மீது கொட்டுகிறீர்கள் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பாஜக எம்எல்ஏ ராஜா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா தாக்குதலால் நாடே சோகத்தில் உள்ள நிலையில், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும், பாகிஸ்தான் நாட்டின் மருமகளான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை தெலங்கானா மாநில விளம்பர தூதர் பதவியில் இருந்து மாநில அரசு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தெலங்கானா மாநில அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக விளம்பர தூதராக அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை அறிவித்தார். இதற்காக சானியா மிர்ஸாவுக்கு இரண்டு கட்டமாக தெலங்கானா மாநில அரசு ரூ.2 கோடியும் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications