ஹீரோ! தீப்பிடித்த லாரி.. மற்றவர்கள் தெறித்து ஓட, துணிந்து இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்! ஷாக் வீடியோ
ஹைதராபாத்: பெட்ரோல் பங்க்கில் லாரி டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்த நிலையில், ஊழியர்கள் தப்பி ஓடியபோதும், ஒரு ஊழியர் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்து பெரும் அழிவைத் தவிர்த்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், புவனகிரி புறநகர் பகுதியில் போங்கிர் நலகொண்டா சாலையில் அமைந்துள்ள நயாரா பெட்ரோல் பங்கிற்குள் நேற்று ஒரு லாரி டீசல் நிரப்புவதற்காக நுழைந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

லாரி டேங்க் வெடித்து மளமளவென தீப்பிடித்ததும் பெட்ரோல் பங்க்கில் இருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கிருந்து தெறித்து ஓடினர். ஆனால், பெட்ரோல் பங்கின் ஊழியர்களில் ஒருவர் மட்டும் துணிவுடன் முன்வந்து ஓடிச்சென்று தீயணைப்பு கருவியை எடுத்து வந்து, லாரியில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சித்தார்.
தீ பரவுவது குறைந்த பின்னர் மற்ற ஊழியர்களும் தீயணைப்பு கருவிகளுடன் வந்து உதவி, தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த தீ விபத்து மற்றும், ஊழியர் அதனை அணைக்க மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. துணிவுடன் துரிதமாகச் செயல்பட்டு, பெரும் அழிவைத் தடுத்த ஊழியரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து புவனகிரி தீயணைப்பு நிலைய தீயணைப்பு நிலைய அலுவலர் சாய் குமார் கூறுகையில், "பெட்ரோல் பம்பிற்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்தில் இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் விரைந்து வந்து 4-5 தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எங்களுக்கு தகவல் வருவதற்குள், தீ ஏற்கனவே அணைக்கப்பட்டது." எனத் தெரிவித்துள்ளார்.
An alert petrol pump employee averted a disaster at Yadradri in Telangana
— Swathi Bellam (@BellamSwathi) May 20, 2024
He must be given an award for this pic.twitter.com/KkOaSlNue0
இந்த தீ விபத்து நிகழ்ந்தபோது அந்த பெட்ரோல் பங்கில் மற்ற வாகனங்களும் எரிபொருள் நிரப்புவதற்காக நின்று கொண்டிருந்தன. ஒருவேளை, லாரியில் பிடித்த தீ மேலும் பரவி இருந்தால் பெட்ரோல் பங்க் முழுவதும் எரிந்து, அப்பகுதியில் மிகப்பெரிய சேதத்தை விளைவித்திருக்கும்.
இதனை தடுத்து, பெட்ரோல் பங்கில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வந்து துரிதமாக செயல்பட்ட ஊழியர் தீயை அணைத்த சம்பவம் புவனகிரி பகுதியில் பேசுபொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications