காந்தியை கொன்ற கோட்சேவை ஆதரிப்பவர் மோடி! முதல் பயங்கரவாதி கோட்சேதான் - தெலுங்கானா அமைச்சர் ராமா ராவ்
ஐதராபாத்: மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவின் கொள்கைகளை நேரடியாக ஆதரிப்பவர் பிரதமர் நரேந்திர மோடி என தெலுங்கானா மாநில அமைச்சர் கே.டி.ராமா ராவ் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல் தலைவரும், அம்மாநில நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சரும், முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமா ராவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் அரங்கேறிக் கொண்டிருக்கும் மதவாத வன்முறை சம்பவங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அமைதி காப்பதாக விமர்சித்து இருக்கிறார்.

கோட்சேவை ஆதரிப்பவர் மோடி
தொடர்ந்து பேசிய ராமா ராவ், "பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் கொள்கைகளை நேரடியாக பின்பற்றி வருபவர். இதை தெரிவித்ததற்காக குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி போல் என்னை கைது செய்து பாருங்கள்" என்று அவர் சவால் விடுத்தார். பிரதமர் மோடி உண்மையாக, நேரடியாக, மறைமுகமாக தேசத் தந்தை காந்தியை கொன்றவனின் கொள்கைகளை ஆதரிக்கவும் ஆமோதிக்கவும் செய்கிறார் என்ற கருத்தில் உறுதியாக நான் உள்ளேன். நம் நாட்டின் முதல் பயங்கரவாதி கோட்சேதான்.

மதவாத தாக்குதல்கள் குறித்து பிரதமர் ஏன் பேசவில்லை?
பகிரங்கமாக கோட்சேவை கொண்டாடும் உங்கள் கட்சியின் எம்.பிக்களை கண்டிக்க மாட்டீர்கள். ஒரு பிரதமராக நீங்கள் கோட்சேவின் கொள்கைகள் ஆதரிப்பீர்கள் என்றால், என்னால் அவ்வாறுதானே சொல்ல முடியும். நாடு முழுவதும் மதவாத மோதல்கள் பெருகியுள்ளன. மக்களின் ஒரு பிரிவினர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். பாதுகாப்பு உணர்வின்றி உள்ளார்கள். இவரை அனைத்தும் பொதுவெளியில் பகிரங்கமாக நடந்தும் பிரதமர் அதுகுறித்து ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

மோடி ஒரு பிரதமர்
'நீ எதை அனுமதிக்கிறாயோ, அதை பரப்புகிறாய்' என்ற கூற்று உள்ளது. நீங்கள் இவற்றை அமைதியாக இருந்து அனுமதிக்கிறீர்களா? அல்லது விளம்பரப்படுத்துகின்றீர்களா? பிரதமர் மோடி பாஜக தலைவரும் ஆர்.எஸ்.எஸ். - சித்தாந்தவாதியும் மட்டுமல்ல. ஒரு நாட்டின் பிரதமர். இவ்வாறு நான் சொல்வது குற்றமாக இருந்தால் அவ்வாறே இருக்கட்டும். இதை சொல்வதற்கு எனக்கு உரிமை உள்ளது.

ஹிஜாபை விட்டுவிட்டு ’ஜாப்’பில் கவனம் செலுத்துங்கள்
நான் பாஜகவின் எழுச்சியை பார்க்கவில்லை. பணவீக்கமும் வேலைவாய்ப்பின்மையும்தான் எழுச்சி பெற்றுள்ளது. வேலைவாய்ப்பின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமடைந்து இருக்கிறது. பணவீக்கம் 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. நான் இதுகுறித்து பேசுவேன். ஹிஜாப்பில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு வேலை வாய்ப்பில் கவனம் செலுத்துங்கள்.

56 இஞ்ச் நெஞ்சு
ஹலால், ஜட்கா குறித்து பேசுவதை விட்டுவிட்டு நிஜ பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும். ஒரு தலைவரின் நெஞ்சு 56 இஞ்ச் இருப்பது பெரிய விசயம் அல்ல. ஏழையின் நெஞ்சும் 56 இஞ்ச் இருக்க வேண்டும். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி பாஜகவின் தோல்வியடைந்த மாடலை அம்பலப்படுத்த விரும்புகிறது. தெலுங்கானாவில் கோல்டன் மாலை நாட்டின் முன் காட்ட விரும்புகிறது." என்றார்.












Click it and Unblock the Notifications