பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை
ஹைதராபாத்: பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முக்கிய பின்னணி பாடகிகளில் ஒருவர் கல்பனா. ராசாவின் மனசுல படம் தொடங்கி வரலாறு, மைனா, ரஜினி முருகன், மாமன்னன் என இவர் பல படங்களில் பல்வேறு பாடல்களைப் பாடியிருக்கிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முக்கிய பாடகியாக வலம் வந்தார். அங்கும் டாப் ஹீரோ படங்களில் பாடல்களைப் பாடியிருக்கிறார். மேலும், மலையாளம், கன்னடம் மொழிகளில் கூட இவர் பாடல்களைப் பாடியிருக்கிறார்.
கல்பனா தற்கொலை முயற்சி
இதற்கிடையே இவர் ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தின் நிஜாம்பேட் பகுதியில் அவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாகவே அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவருக்கு போன் செய்துள்ளனர். இருப்பினும், யாரும் எடுக்கவில்லை.
அவரது கணவர் வேலை விஷயமாகச் சென்னை வந்திருந்த நிலையில், அவரிடமும் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். அவரும் தனது மனைவி கல்பனாவுக்கு கால் செய்துள்ளார். ஆனால், அவராலும் தனது மனைவியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
என்ன நடந்தது?
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கல்பனா வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது தான் கல்பனா வீட்டில் சுயநினைவின்றி கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது.
தீவிர சிகிச்சை
உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரது கணவரும் உடனடியாக சென்னையில் இருந்து ஹைதராபாத் திரும்புகிறார். அவர் எதற்காக இதுபோல தற்கொலை முடிவை எடுத்தார்.. இதற்கு யாராவது காரணமா.. தற்கொலைக்கு முன்பு எதாவது கடிதம் எழுதி வைத்து இருந்தாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பின்னணி பாடகியான கல்பனா 100க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். மேலும், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சேனல்களில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.. மேலும், அவர் சிறு வயதிலேயே கமல் நடிப்பில் வெளியான புன்னகை மன்னன் படத்தில் சிறிய ரோலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications