ஆஜரான பிரகாஷ் ராஜ்.. துருவி எடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள்! சூதாட்ட செயலி வழக்கில் கிடுக்குப்பிடி
ஹைதராபாத்: ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரம் செய்த விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை (ED) அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். பல பிரபலங்களுடன் சேர்த்து, சட்டவிரோத சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் நடித்ததாக பிரகாஷ் ராஜ் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
விசாரணையின் போது, தான் ஒரு ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் ஒப்பந்தம் செய்திருந்ததாகவும், ஆனால் அதன் செயல்பாடுகள் குறித்து கவலைகள் எழுந்ததால் 2017 ஆம் ஆண்டிலேயே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாகவும் பிரகாஷ் ராஜ் விளக்கமளித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட செயலிகளால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற சட்டவிரோத செயலிகளுக்கு விளம்பரம் செய்ததாக நடிகர் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, மஞ்சு லக்ஷ்மி உட்பட சுமார் 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், ராணா டகுபதி கடந்த ஜூலை 23 அன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், திரைப்படப் பணிகளைக் காரணம் காட்டி அவகாசம் கோரியுள்ளார். விஜய் தேவரகொண்டா ஆகஸ்ட் 6 ஆம் தேதியும், மஞ்சு லக்ஷ்மி ஆகஸ்ட் 13 ஆம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை இந்த வழக்கை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரித்து வருகிறது. சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications