ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் மிகப்பெரிய ஊழல்வாதி: சுப்பிரமணியன் சுவாமி திடுக் குற்றச்சாட்டு
ஹைதராபாத் : ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் சக்திகாந்த தாஸ், மிகப்பெரிய ஊழல்வாதி என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர், மிகப்பெரிய ஊழல்வாதி. நிதியமைச்சகத்தில் இருந்து அவரை பதவிநீக்கம் செய்ய வைத்தேன். அப்படிப்பட்ட நபர், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டது ஆச்சரியத்தை அளிக்கிறது.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி பேசினார்.

ஆனால், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் என்ன ஊழலில் ஈடுபட்டார் என்பது குறித்த தகவலை சுப்பிரமணியன் சுவாமி தெரிவிக்கவில்லை. அதை தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் ஆளுநராக யார் நியமிக்கப்பட வேண்டும்? என எதிர்பார்க்கிறீர்கள் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
பெங்களூரு ஐஐஎம் பேராசிரியரான ஆர்.வைத்தியநாதன் அந்த பதவிக்கு தகுதியானவர். அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்.

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை எதுவும் வீசவில்லை. அதனால், வரும் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பாஜகவே மீண்டும் வெற்றி பெறும்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, பிரிட்டன் குடியுரிமை உள்ளது. அவரால் நமது நாட்டின் பிரதமராக முடியாது. அதுமட்டுமல்லாமல், ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்தால், அவரால் எம்பியாக கூட முடியாது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள மக்கள், அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே, அயோத்தியில் நிச்சயம் ராமர் கோயில் கட்டுவோம்.
ராமர் கோயில் தொடர்பாக ஹிந்து தர்ம ஆச்சார்ய சபையிடம் நான் திட்டம் அளித்துள்ளேன்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி பேட்டியளித்தார்.












Click it and Unblock the Notifications