இந்தியாவில் அறிமுகமானது ஸ்புட்னிக் வி தடுப்பூசி.. எப்போது கிடைக்கும்.. விலை என்ன.. விவரம்!
ஹைதராபாத்: இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி 5 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் ரூ.995க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி அடுத்த வாரத்தில் சந்தைக்கு வரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை டாக்டர் ரெட்டி ஆய்வகத்தின் தலைமை நிர்வாகியான தீபக் சப்ரா இன்று எடுத்துக்கொண்டார்.
இன்று முதல் சாப்ட் லான்ஞ் முறையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படும் என்று டாக்டர் ரெட்டி லேப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இறக்குமதி
இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக தற்போது கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டுமே புழக்கத்தில் இருந்து வந்தது மூன்றாவதாக ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், தயாரிக்கவும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
தீபக் சப்ரா
இதன்படி, கடந்த 1-ம் தேதி ரஷ்யாவிலிருந்து முதல்கட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் இறக்குமதியானது. மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் முறையான அனுமதி நேற்று கிடைத்தது. இதையடுத்து இன்று ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது. டாக்டர் ரெட்டி ஆய்வகத்தின் தலைமை நிர்வாகியான தீபக் சப்ரா முதல் டோஸை எடுத்துக்கொண்டார்.
ஒரு டோஸ் ரூ.995
ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் விலை ரூ.948 ஆகவும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியுடன் ஒரு டோஸ் ரூ.995 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த வாரம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி சந்தைக்கு வரும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது.
தயாரிக்க பேச்சுவார்த்தை
இந்நிலையில் ரெட்டி லேப்ஸ் நிறுவனம் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அதிக அளவு இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. எனினும் இந்தியாவிலேயே தயாரிக்கவும் ரெட்டி லேப்ஸ் ஆறு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறது. மத்திய அரசு மற்றும் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்து.