ரேவந்த் ரெட்டி சொன்ன பாயிண்ட்! தொகுதி மறுசீரமைப்பில் ஒரு விஷயம் ரொம்ப முக்கியமாம்! ஆஹா நோட் பண்ணுங்க
ஹைதராபாத்: தொகுதி மறுசீரமைப்பு செய்யும்போது தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையலாம் என்று கூறப்படும் நிலையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளார். தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறித்துப் பேசியுள்ள ரேவந்த் ரெட்டி, கடந்த காலங்களில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பையும் உதாரணமாகக் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து சமீபத்தில் தான் தமிழக அரசு சார்பில் சென்னையில் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் நேரடியாகப் பங்கேற்றனர். இதற்கிடையே தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

ரேவந்த் ரெட்டி
இதற்கிடையே மக்களவையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார். லோக்சபாவில் தற்போது தென்மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் 24%ஆக உள்ள நிலையில், அதை 33% ஆக உயர்த்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் அனைத்து மாநிலங்களும் இணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதை அடைய முடியும் என்றும் ரேவந்த் ரெட்டி குறிப்பிட்டார்.
அதிகரிக்க வேண்டும்
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "தற்போதுள்ள 543 இடங்களில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் வெறும் 130ஆக மட்டுமே இருக்கிறது. அதாவது 24% மட்டுமே இருக்கிறோம்.. இதுவே குறைவுதான். இதற்குக் கீழ் நமது பிரதிநிதித்துவம் குறைந்தால் இந்தியாவின் அரசியல் அரங்கில் வெறும் பார்வையாளராக மட்டுமே தென்மாநிலங்கள் இருக்கும்.
சிறப்பாகச் செயல்பட்டதே தென்மாநிலங்கள் தான்
1971ஆம் ஆண்டில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை ஒரு தேசிய முன்னுரிமையாக இந்தியா ஏற்றது. அப்போது தென்னிந்திய மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. ஆனால் வட இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்கள் இதில் தோல்வியடைந்துள்ளன. மறுபுறம் வளர்ச்சியில் தென்மாநிலங்கள் வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் வருமானம், வேலைவாய்ப்பு உருவாக்கம், சிறந்த உள்கட்டமைப்பு, நிர்வாகம் மற்றும் சமூக நலன் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறது.
தேசிய வருவாயில் தென்மாநிலங்கள் பங்களிப்பைக் காட்டிலும் குறைவான பங்கையே மத்திய அரசிடம் இருந்து திரும்பப் பெறுகிறது. உதாரணமாக, தமிழ்நாடு செலுத்தும் ஒரு ரூபாய் வரிக்கு 26 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. அதேபோல் கர்நாடகாவிற்கு 16 பைசா, தெலுங்கானாவிற்கு 42 பைசா மற்றும் கேரளாவிற்கு 49 பைசாவும் மட்டுமே திரும்பக் கிடைக்கிறது.
தென்மாநில குரல்கள் நசுக்கப்படும்
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் அது தென்மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படும். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது சிறப்பாகச் செயல்பட மாநிலங்களைத் தண்டிக்கும் செயல்போல இருக்கும். எந்தவொரு நியாயமற்ற தொகுதி மறுசீரமைப்பையும் பாஜக செய்யக்கூடாது.
முக்கியமான பாயிண்ட்
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதும் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. ஆனால், லோக்சபா இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. லோக்சபா இடங்களை அதிகரிப்பது மாநிலங்களுக்கு இடையே அரசியல் அதிகார ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என்பதால் அவர் அதுபோல செய்தார்..
கடந்த 2001ம் ஆண்டு வாஜ்பாய் அரசும் கூட அதையே தான் செய்தது.. எனவே பிரதமர் நரேந்திர மோடியும் அதையே செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பைத் தென்மாநிலங்கள் ஏற்காது என்பதைப் பிரதமருக்குச் சொல்லிக்கொள்கிறோம். ப்ரோ ரேட்டா அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தாலும் அதுவும் தென் மாநிலங்களைப் பாதிக்கவே செய்யும். நமது நாட்டில் ஒரு இடம் அதிகம் பெற்றாலும் பெரும்பான்மை தான் யார் அதிகாரத்திற்கு வருகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications